ஜெ. மர்ம மரணம்: தமிழக மக்கள் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில்கள் எங்கே?-- மு.க. ஸ்டாலின்
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து தமிழக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து தமிழக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அளித்து அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் மர்ம மரண் குறித்து திமுக தொண்டர்களுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

பொய்களுக்குப் பூச்சூட்டி அலங்காரம் செய்து வைத்தாலும் அந்த ஒப்பனை அதிக நாள் தாங்காது. உண்மையின் முகம் எப்படியும் வெளிப்பட்டுவிடும். தமிழ்நாட்டில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22ஆம் நாள் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கி, அவரின் மரணச்செய்தி வெளியான டிசம்பர் 5-ஆம் நாள் வரை ஜெயலலிதாவுக்கு என்னவிதமான உடல்நலக் கோளாறு, அவரின் உடல்நலன் என்ன நிலையில் உள்ளது என்ற உண்மை நிலவரம் எதுவுமே சரியாக வெளியிடப்படவில்லை. மாறாக, தமிழ்நாட்டு மக்களையும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட அவரது கட்சித் தொண்டர்களையுமே திசை திருப்பும் வகையில், இட்டுக்கட்டிய செய்திகளையே வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

முதலமைச்சர் என்ற பொறுப்புக்கு அளிக்க வேண்டிய மரியாதையின் காரணமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் கருணாநிதியின் உத்தரவுக்கிணங்க, எதிர்க்கட்சி த் தலைவர் என்ற முறையில் நானும் திமுக நிர்வாகிகளும் அக்டோபர் 8-ஆம் தேதி 2016 அன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் நலன் விசாரிக்கச் சென்றோம். அமைச்சர்களிடம் தான் அவரது நலன் குறித்து கேட்டறிய முடிந்தது. இதனை அப்போதே ஊடகங்களிடம் தெரிவித்து, ஜெயலலிதா விரைந்து நலன் பெற வேண்டும் என்கிற விருப்பத்தையும் திமுக சார்பில் தெரிவித்துத் திரும்பினோம்.
உடல்நிலை குறித்து எங்களிடம் தெரிவித்த அமைச்சர்கள் கூட, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்றைய முதலமைச்சரைப் பார்க்க வில்லை என்கிற உண்மையை அண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுமேடையில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதாவை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் உள்பட யாருமே பார்க்கவில்லை. அவர்கள் பார்த்தார்கள் என்றும் இவர்கள் பார்த்தார்கள் என்றும் சொல்வது எல்லாமே பொய் என்று ஊரறிய உண்மையை உரைப்பதாகக் கூறி அமைச்சர் அந்த மேடையில் பேசியிருக்கிறார்.
ஓர் அமைச்சரே உண்மையைச் சொன்ன பிறகு, அடுத்தடுத்து பல அமைச்சர்கள் பொய்ப்பூச்சு பூசி அதனை மறைக்கப் பார்க்கிறார்கள். கிராமப்புறங்களிலே எரிந்த கட்சி-எரியாத கட்சி என்று இரு அணிகளாக இருந்து லாவணிக் கச்சேரி நடத்துவார்களே அதுபோல இரு அணிகளாக செயல்படும் அ.தி.மு.க.வுக்குள்ளேயே பல அணிகள் பிரிந்து, சிகிச்சையின் போது ஜெயலலிதாவைப் பார்த்தோம் என்று ஒரு பிரிவினரும், பார்க்கவேயில்லை என்று இன்னொரு பிரிவினரும் லாவணிக் கச்சேரி நடத்துகிறார்கள்.

சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அவரது மரணம் அறிவிக்கப்பட்ட நாள் வரை எல்லாமே மர்மமாக இருந்த நிலையில், முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், எழுந்து நடந்தார், காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தினார் என்று தினம் ஒரு தகவல் பரப்பப்பட்டது.
முதலமைச்சர் நலமடைந்து நாட்டு நலன் பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால் அந்தப் புகைப்படத்தை வெளியிடலாமே என அப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால், அன்று அரசியல் காழ்ப்புணர்வுடன் அதனைக் கடுமையாக விமர்சித்தவர்கள் தான் இன்று புகைப்படம் மட்டுமல்ல, வீடியோவும் வெளியிட வேண்டும் என்கிறார்கள். கருணாநிதி சொன்னதைக் கேட்டிருந்தால் அப்போதே உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டில் சிசிடிவி கேமரா இல்லை என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மருத்துவமனை அனுமதியுடன் தனிப்பட்ட முறையில் எடுத்த வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் அதை உரிய விசாரணை அமைப்பில் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications