சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சிறை- ஜாமீன் பெறுவதற்காக சசிகலா கணவர் நடராஜன் கோர்ட்டில் சரண்!
ஜாமீன் பெறுவதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சென்னை: ஜாமீன் பெறுவதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994-ம் ஆண்டு புதிய லெக்சஸ் எனப்படும் வெளிநாட்டு சொகுசு காரை பயன்படுத்திய கார் என கூறி குறைந்த விலைக்கு இறக்குமதி செய்தார். சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ 1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சிறையை உறுதி செய்த ஹைகோர்ட்
இந்த வழக்கில் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

நிராகரித்த ஹைகோர்ட்
இதைத்தொடர்ந்து உடல்நலக்குறைவால் உடனே சரணடைவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என நடராஜன் மற்றும் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அதனை சென்னை ஹைகோர்ட் நிராகரித்தது.

விலக்கு அளித்த சுப்ரீம்கோர்ட்
இதையடுத்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். அவர்களின் மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

பிடிவாரண்ட் பிறப்பிப்பு
இதனிடையே நடராஜன் மற்றும் பாஸ்கரனுக்கு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சி.பி.ஐ கோர்ட் உத்தரவிட்டது. சரணடைய விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் நகலை நடராஜன், சமர்பிக்காததால் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்
இந்நிலையில், இவ்வழக்கில் ஜாமீன் கோரி குற்றவாளிகள் 4 பேரும் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் 25 லட்சம் ரூபாய்க்கு பிணைத்தொகை செலுத்தி, கோர்ட்டில் சரணடைந்து பின்னர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜாமீன் பெற சரண்
இந்நிலையில் ஜாமீன் பெறுவதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகையை செலுத்தி அவர் ஜாமீன் பெறுவார் தெரிகிறது.












Click it and Unblock the Notifications