'கலகக் குரல்' வசந்தகுமாரை காங். வர்த்தகப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்த ஈவிகேஎஸ்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கட்சி மேலிடத்தில் புகார் அளித்தவர்களில் ஒருவரான வசந்தகுமார், அக்கட்சியின் வர்த்தகர் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப் பட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக கட்சி மேலிடத்திடம் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோர் நேரில் புகார் தெரிவித்தனர். இளங்கோவனை மாற்ற வேண்டும் என்றும் அப்போது அவர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவின் புதிய தலைவராக திரு எம். எஸ். திரவியம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் : #EVKS pic.twitter.com/t74O95Hg3w
— EVKS Elangovan (@EVKSElangovan) November 23, 2015
இந்த டெல்லி பயணத்தின் போது, அவர்களுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கோபிநாத், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இளங்கோவனுக்கும், தங்கபாலுவுக்கும் இடையே ஊடகங்கள் வழியாக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தனக்கு எதிராக டெல்லி சென்று புகார் அளித்த வசந்தகுமாரை காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக செயல்பட்டு வரும் எச்.வசந்தகுமார், கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவர் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். அவர் இன்று முதல் வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் படுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வர்த்தக சமுதாயத்தினர் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.