முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தரம் ஏரி... கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மதுராந்தகத்தில் உள்ள ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அருகில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 45- இல் இருப்பது மதுராந்தகம் ஏரி. இது தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியாகும். இதன் கொள்ளளவு 23.20 அடியாகும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இதன் நீர் மட்டம உயர்ந்துள்ளது.
ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஏரி தனது முழு கொள்ளளவான 23.2 அடியை எட்டியுள்ளது. இன்று இரவு மழை பெய்தால் நீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வலது கரை, இடது கரையோரங்களில் உள்ள குன்னத்தூர், மலையப்பாளையம், தோட்ட நாவல், கே.கே.புதூர், விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், நீலமங்கலம், கத்திரிசேரி, வீராணகுண்ணம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுமார் 10,000 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளன. மேலும் இந்த ஏரி ஆபத்தான பகுதியாக உள்ளதால் இங்கு குளிப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.