த்தூ.... விவகாரம்: விஜயகாந்த் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: பத்திரிகையாளர்களை நோக்கி ..த்தூ என தேமுதிக தலைவர் விஜயகாந்த் காறிதுப்பியது தொடர்பான புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜயகாந்த், நிலை தவறியவராக ....த்தூ என காறி துப்பினார். இது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
இது குறித்து பத்திரிக்கையாளர் தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காவல் துறை தலைவர், சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர், மயிலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டது.

கடந்த டிசம்பர் 28-ந் தேதி இணையம் வழியாக புகார் பதிவு செய்து, அதன் நகல் காவல்துறைக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், போலீஸார் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் விஜயகாந்த் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, தேவராஜின் மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் கிடைத்தால் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்வதற்கு தேவையான முகாந்திரம் இல்லாவிட்டால், அதுகுறித்து புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications