காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்க்கும் மனு தள்ளுபடி
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து பேராசிரியர் சரசுவதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் சரசுவதி அண்மையில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் 2009 வரை ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏராளமான மனித உரிமை மீறலும் நடந்துள்ளன.
இந் நிலையில் வருகிற நவம்பர் 10 முதல் 16-ந்தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்ட நாட்டில் இதுபோன்ற மாநாடு நடத்துவது உகந்தது அல்ல. எனவே இம் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால் இக் கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இம் மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி என்.சத்திய நாராயணன் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்து ஒத்திவைக்கப்பட்டது. இன்று இம்மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இம் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications