கோவையில் கைது செய்யப்பட்ட 5 மாவோயிஸ்டுகளுக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை: கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை அருகே கருமத்தம்பட்டி- அன்னூர் சாலையில் கடந்த ஆண்டு 5 மாவோயிஸ்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த ரூபேஷ், மனைவி சைனா மற்றும் அனூப், மதுரை கார்த்தி, கடலூர் ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மே மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் கியூ பிரிவு போலீசார் கஸ்டடியில் எடுத்தும் விசாரித்தனர். இதனிடையே 5 மாவோயிஸ்டுகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன. பின்னர் 5 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் 5 பேரும் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாவோயிஸ்டுகள் 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இம்மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம், 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். கியூ பிரிவு காவல்துறையினர் முன் 5 பேரும் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது நிபந்தனை.












Click it and Unblock the Notifications