காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம்
சென்னை: தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு மனு தாக்கல் செய்யாததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.பிரகாஷ்ராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகின்றனர். அவ்வாறு தாக்கப்படுபவர்களில் சிலர், இறக்கின்றனர். இவையனைத்தையும் செய்தித்தாளில் நான் படித்தேன். இது மனித உரிமை மீறிய செயல்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி, விசாரணைக்காக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை போலீஸார் சுட்டனர். மேலும், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட பெண் சித்திரவதைக்குள்ளான சம்பவம் நடைபெற்றது.
சமீபத்தில் கடந்த 15ஆம் தேதி ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவரை எஸ்.ஐ. மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நேர்ந்தது. சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் போலீஸ் நிலையத்தில் நடந்துள்ளது.
இதுபற்றி தெரிந்து கொள்ள வசதிக்காக போலீஸ் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். போலீஸ் நிலைய நடவடிக்கைகளை தொடர்ந்து பதிவு செய்தால் அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாகவும், அந்த சூழ்நிலைகளையும் ஆய்வு செய்வது மிகவும் எளிதாக இருக்கும். இந்தப் பதிவுகளை பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபணம் செய்ய முடியும். தவிர, விசாரணை வெளிப்படையாக நடப்பதற்கு இது உதவும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, தமிழக அரசு, டிஜிபி ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், டிசம்பர் 16ம் தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 வாரத்தில் மனுதாரர்கள் ரி-ஜாயிண்டர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 02ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடிக்கடி அபராதம் விதிக்கிறது. கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்காத அரசுக்கு கடந்த அக்டோபர் மதம் ரூ.10000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.