தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து 4 வாரத்திற்கு நீடிப்பு- திமுக, தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் நான்கு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் இந்த வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் தர திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 4ம் தேதி முடிவடைந்தது. திமுக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.
திமுக மனு விபரம்
திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு 19ம் தேதி சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒதுக்கீடு இல்லை
இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை
இம்மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரணை நடத்தினார். திமுக மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அரசாணைகள் அனைத்துக்கும் அவர் தடை விதித்தார்.
மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு
உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று அக்டோபர் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
4 வாரங்களுக்கு தடை தொடரும்
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ் வீ. பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று உத்தரவிட்டனர். உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் தர திமுகவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.