சுயமரியாதை திருமண முறைக்கு தடை கோரிய மனு சென்னை ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்!!
சென்னை: சுயமரியாதை திருமண முறைக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுவத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், இந்து திருமணச் சட்டம், 1955-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்து மதத்தில் காலகாலமாக பின்பற்றி வரும் திருமண சடங்குகளை இந்த சட்டம் உறுதி செய்கிறது. திருமணத்தின்போது, அக்னி குண்டத்துக்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ளும் 7 நிலை சடங்குகள் செய்து முடிந்ததும், அந்த திருமணம் நிறைவடைகிறது.

ஆனால், தமிழகத்தில் நாத்திக கொள்கை கொண்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்த கட்சி, 1967ம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தில் கூடுதலாக ஒரு பிரிவை சேர்த்து திருத்தம் செய்தது. அதாவது, சுயமரியாதை மற்றும் சீர்த்திருத்த திருமணம் என்பதை சேர்க்கப்பட்டது. இந்து திருமண விழாவில், நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் கலந்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த சுயமரியாதை, சீர்த்திருத்த திருமண நிகழ்ச்சியில் 2 பேர் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. இதை திருமண ஒப்பந்தம் என்று கூறுகின்றனர். திருமணம் என்பது இருதரப்பு செய்துக்கொள்ளும் ஒப்பந்தம் கிடையாது. இந்த திருமண முறை இந்து மத கொள்கைகளை ஒட்டு மொத்தமாக வீணடிக்கிறது. மோதிரம் மாற்றி திருமணம் செய்வது என்பது இந்து மதத்தில் இல்லாத பழக்கம். ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின் மீது திணிப்பது விதிமீறல் ஆகும். ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்து மத சாஸ்திரம், சம்பிரதாயத்தின் அடிப்படையில் திருமணம் நடைபெறவேண்டும்.
எனவே, சீர்த்திருத்தம் மற்றும் சுயமரியாதை திருமணம் என்று இந்து திருமண சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்தது சட்ட விரோதம் என்று அறிவித்து, இந்த திருமண முறையை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீர்த்திருத்த மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்துக்கொள்ளலாம். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications