அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? அரசுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சென்னை: தடியடி சம்பவம் குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்விகளை காவல்துறைக்கு எழுப்பியது.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இன்று போலீஸ்-பொதுமக்கள் மோதலாக மாறியதால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

மெரினா கடற்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கலவரக் காடாக மாறியுள்ளது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் மாணவர்கள் மீது இன்று காலை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக ஹைகோர்ட் தலையிட வேண்டும் என வழக்கறிஞர்கள் சுதா, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் சிறப்பு மனு ஒன்றினை இன்று தாக்குதல் செய்தனர்.
சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னர் இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடந்தது. மாநில அரசின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து, இன்று மதியம், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டதால், தனி நீதிபதி மகாதேவன் முன்பு சங்கரசுப்பு முறையிட்டார். இதையடுத்து மனுவை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி, பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

கடந்த 19ஆம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்திவந்தனர் என்றும் அதன்பிறகு, மாணவர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டனர் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி வாதிட்டார். இதனால்தான் தடியடி நடந்துள்ளதாக அவர் கூறினார்.
விரும்பத்தகாத வகையில் சம்பவங்கள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றபோதிலும் பொதுமக்கள் பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார். மேலும் எப்போது வரை போராட்டம் நடைபெற உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதேநேரம், மனுதாரர் கோரியதை போல, போராடியவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியக்கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட முடியாது என்றும் ஆனால், போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால், அதாவது வன்முறையில் ஈடுபடாமலேயே வழக்குப் பதிவுக்கு உள்ளானால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தார் நீதிபதி. இந்த வழக்கு நாளைக்கும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications