அடடே.. செல்லூர் ராஜு தொகுதி மக்களின் நக்கல் நையாண்டி போராட்டத்தை பாருங்களேன்!
குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
மதுரை: தொகுதி பிரச்சனைகளை வலியுறுத்தி எத்தனையோ போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மாநிலங்களில் நடந்துள்ளன. அவைகளில் சில போராட்டங்களில் கோபங்கள் கொப்பளிக்கும். சில போராட்டங்கள் நரம்புகள் புடைக்கும். சில போராட்டங்கள் நூதனமாக இருக்கும். ஆனால் இந்த போராட்டம் நூதனத்திலும் நூதனம். படியுங்களேன்.
மதுரை மாநகராட்சி 21-வது வார்டு பகுதி பெத்தானியாபுரம். இங்குள்ள அண்ணா மெயின் வீதியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயை சீரமைக்க பள்ளங்கள் தோண்டினர். இதுபோன்று அதே தெருவில் மட்டும் 8 இடங்களில் குழிகளை தோண்டினர். ஆனால் வேலை முடிந்தபிறகு தோண்டிப்போட்ட குழிகளை மூடாமலேயே மாநகராட்சி நிர்வாகம் சென்றுவிட்டது. இதனால் அந்த குழிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி விழுந்துவிடவே விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இது இல்லாமல் இந்த தெருவில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. குழிகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை சொல்லி சொல்லி பார்த்தார்கள். நடவடிக்கை ஏதும் எடுத்தாற்போல தெரியவில்லை. எத்தனையோ முறை மாநகராட்சிக்கு புகார்களையும் கொடுத்து பார்த்தாயிற்று. ஒன்றும் வேலைக்காகவில்லை.
அதனால் அப்பகுதி மக்கள் தோண்டிப்போட்ட 8 குழிகளை மூட வலியுறுத்தி போராட முடிவெடுத்தனர். அதன்படி நேற்று அனைவரும் ஒன்று திரண்டனர். பெரிய அளவில் கோஷங்கள், ஆர்ப்பாட்டங்களுடன் களத்தில் குதிப்பார்கள் என்று பார்த்தால், எல்லோரும் சேர்ந்து கையில் ஒரே ஒரு தெர்மாகோலை கொண்டு வந்தனர். அதை கொண்டு வந்து அங்குள்ள ஒரு பெரிய குழியை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம், அது அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதிக்கு உட்பட்டதாம்!
என்ன செய்வது, மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியில் போய்த்தானே குமட்டில் குட்ட வேண்டியுள்ளது!