அரிசி டப்பாவுல பீரோ சாவியை வைக்காதீங்க, கையில் மிளகாய்ப் பொடி வச்சுக்கங்க – பெண்களுக்கு அட்வைஸ்!
மதுரை: மதுரையில் பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க பெண்கள் எப்போதும் கைவசம் மிளகாய்பொடி வைத்திருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
மதுரையில் அடிக்கடி நடைபெறும் நகை பறிப்பில் இருந்து தப்பிக்கவும், வீடுகளில் திருட்டு நடக்காமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் மல்லிகை குடியிருப்பில் நடந்தது.
அதில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் சாமந்த்ரோகன் ராஜேந்திரா பெண்களுக்கு ஆலோசனை கூறினார்.
நகைக்கடை மாடல் இல்லை:
வெளியே செல்லும் போது நகைக்கடை விளம்பர பெண் போன்று அதிக நகைகளை அணிந்து செல்ல வேண்டாம். பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷனில் திருடர்கள் குறித்து எச்சரிக்கும்போது பயத்தில் உங்கள் பையை நீங்கள் ஆய்வு செய்யக்கூடாது.
அரிசி டப்பாவில் பீரோ சாவி:
பீரோ சாவியை பருப்பு அரிசி டப்பாக்களில் வைக்க வேண்டாம். வங்கியில் பணம் எடுக்கும்போது அறிமுகமில்லாதவர் தெரிந்தவர் போல் பேசி கவனத்தை திசை திருப்பக்கூடும். அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுழற்சி முறை கண்காணிப்பு:
வெளியூர் சென்றால் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பர். வீட்டின் பின்பக்க கதவுக்கும் பூட்டு அவசியம். அண்ணாநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவியை வீட்டில் வைக்காதீர்கள்:
நகைபறித்தால் சத்தமிடுங்கள். வெளியூர் சென்றால் எங்களுக்கும் பக்கத்து வீட்டாருக்கும் தகவல் சொல்லுங்கள். சாவியை வீட்டிலேயே வைக்காமல் நம்பிக்கைக் குரியவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள்.
மிளகாய் பொடி தேவை:
தனியாக செல்லும்போது கைவசம் மிளகாய்பொடி அவசியம். தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாராவது நகைபறிக்க முயற்சிக்கும் நோக்கத்தில் வந்தால் அதை பயன்படுத்த வேண்டும்.
எச்சரிக்கையாக இருங்கள்:
பத்து ரூபாயை கீழே போட்டும் பிஸ்கட் போன்றவற்றை நம் மீது வீசியும் கவனத்தை திசைதிருப்பி பொருட்களை திருடுவர். அதேபோல் போலீஸ் என்றுக்கூறி உதவுவது போல் நடித்து நகை திருடுவர். அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.