மதுரையில் செல்போனுக்காக +2 மாணவர் கொலை... அனைத்து கொலையாளிகளும் கைது: கமிஷனர்
மதுரையில் செல்போனுக்காக பிளஸ் 2 மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து மதுரை மாநகர ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை: மதுரையில் செல்போனுக்காக பிளஸ் 2 மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து மதுரை மாநகர ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். கொலையாளிகள் அனைவரும் உள்ளூர்காரர்கள் என காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மகால் 9-ஆவது தெருவைச் சேர்ந்த குமரேஷ்பாபு-கிரிஜா தம்பதியின் மகன் நாகராஜ். இவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நாகராஜ் தனது பெற்றோருடன் வண்டியூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.
அங்கிருந்து நாகராஜின் பெற்றோர் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பினர்.
ஆட்டோவில் வந்த நாகராஜ், புனித மேரி பள்ளி அருகே இறங்கி நடந்து சென்றுள்ளார்.
செல்போனைக் கேட்டு கத்திக்குத்து
அப்போது, அங்கு வந்த கும்பல் நாகராஜை வழிமறித்து செல்போனைக் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், நாகராஜை கத்தியால் குத்திவிட்டு போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.
மருத்துவமனையில் உயிரிழப்பு
இதில், பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனயில் சேர்த்த சிறிது நேரத்திலேயே மாணவர் நாகராஜ் உயிரிழந்து விட்டார்.
காவல் ஆணையர் விளக்கம்
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் இது குறித்து இன்று விளக்கம் அளித்தார்.
முதல் முறை குற்றம்புரிந்தவர்கள்
அப்போது செல்போனுக்காக ப்ளஸ் டூ மாணவரை கொன்று கொலையாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். கொலையில் ஈடுபட்ட பலரும் முதல்முறையாக குற்றச்செயல் புரிந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். உள்ளூரில் உள்ள நபர்களே மதுரையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாக காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறியுள்ளார்.