பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி... மிளகாய் பொடி தூவி... தப்பிச் சென்ற கொடூர கொள்ளையன்!
மதுரை: மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு கொள்ளையன் மிளகாய் பொடி தூவி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. புதூர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெயக்குமார் பொறியாளர். இவருக்கும், தல்லாகுளம் முதலியார் கிழக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்ற குமரகுருபரன் மகள் பவித்ராவுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது.
ஜெயக்குமார் திருமணத்திற்கு பின்பு துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். பவித்ரா தனது மாமியாருடன் தற்போதுள்ள விலாசத்தில் மாடி வீட்டில் வசித்து வந்தார். வழக்கம் போல் மாமியார் வேலைக்கு சென்றதும், நேற்று பவித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது காலை 11.30 மணி அளவில் துபாயில் இருந்து ஜெயக்குமார் தனது மனைவியை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் பவித்ரா போனை எடுக்கவில்லை. எனவே அவர் தனது தாயாருக்கு போனில் பேசி தனது மனைவி போன் எடுக்காமல் இருப்பது குறித்து கூறியுள்ளார். அதை தொடர்ந்து மாமியார் ஜெயந்தியும், பவித்ராவை செல்போனில் அழைத்த போது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாமியார் ஜெயந்தி கீழ் வீட்டில் வசிக்கும் உரிமையாளர்களுக்கு போனில் பேசினார்.
அப்போது வீட்டின் உரிமையாளரான ஜெகதீசனின் மனைவி தான் வெளியே இருப்பதாகவும், வீட்டிற்கு வந்து என்வென்று பார்ப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி மதியம் 3 மணிக்கு மேல் வந்த அவர் மேலே வசிக்கும் பவித்ராவை பார்க்க சென்றார். அங்கு கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தன. இதனால் சந்தேகத்துடன் அவர் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தார். அங்கு கடைசி அறையில் பவித்ரா கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பவித்ராவின் மாமியாருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். உடனே ஜெயந்தி வீட்டிற்கு விரைந்து வந்தார். மேலும் சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர்கள் கங்காதர், உமையாள் மற்றும் தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்தனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த, பரபரப்பான பகுதியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் கொலை குறித்து போலீசார் கூறும் போது கொலையாளி முதலில் பவித்ராவின் கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்துள்ளார். பின்னர் சமையல் அறையில் இருத்த கத்தியை எடுத்து கழுத்தில் பல இடங்களில் குத்தியுள்ளார். அப்போது அந்த கத்தி உடைந்து உள்ளது. ஆனாலும் பவித்ரா உயிர் இழக்கவில்லை என்பதால் கொலையாளி அங்கு கிடந்த தேங்காய் சில்லு எடுக்கும் கத்தியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதன் பின்னர் மற்றொரு கத்தியை எடுத்து மீண்டும் கழுத்தில் குத்தியுள்ளார். அந்த கத்தியை கழுத்தில் இருந்து எடுக்க முடியாததால் அது குத்திய நிலையில் இருந்தது.
இவ்வளவு கொடூரமாக கொலை செய்து விட்டு கொலையாளி அங்கிருந்து தப்பி செல்லும் போது போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க பவித்ராவின் உடல் மற்றும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளார். மேலும் கொலையாளி தப்பி செல்லும் போது பவித்ரா அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் பீரோவில் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியையும் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து, தல்லாகுளம் முதலியார் தெரு வரை சென்றது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் அனைத்து தடயங்களையும் சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.