அம்மா அணிக்கா? பாஜகவுக்கு போறீங்களா?... மாஃபா பாண்டியராஜனை கிறங்கடித்த கேள்வி!
அணி மாறப்போவதாக வெளியாகும் வதந்திகள் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு தாவப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எல்லாம் வதந்தி என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
முறையான மரியாதை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கு முதலில் வந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அண்மையில் அதிமுக அம்மா அணிக்கு தாவினார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கான பலம் குறைந்ததை அறிந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அம்மா அணிக்கே திரும்புவார்கள் என்று எடப்பாடி தரப்பு கொக்கரித்து வந்தது.
அதிமுக அம்மா அணி பேச்சாளரும் தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத்தும், ஓ.பன்னீர்செல்வம் தனி மரமாவார் என்று கூறியிருந்தார். மேலும் நிச்சயம் ஓரிரு நாளில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அம்மா அணிக்கே மீண்டும் வந்துவிடுவார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அம்மாவின் வழியில் உண்மையாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்துடனே நான் தொடர்ந்து பணியாற்றுவேன். அணி தாவப் போவதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் மாஃபா பாண்டியராஜனை கிண்டல் செய்யும் வகையில் நெட்டிசன் ஒருவர் அம்மா நீங்க அம்மா அதிமுக போரதா சொன்னாங்க ?? பொய்யா அது .. பாஜக விற்கு போறீங்களா ?? என்று கேட்டுள்ளார். இதற்கும் பதிலளித்துள்ள மாஃபா பாண்டியராஜன் அது உண்மையல்ல என்று கூறியுள்ளார்.
மாஃபா என்னும் எச் ஆர் கன்சல்டன்சி நடத்தி வந்த மாஃபா பாண்டியராஜன், முதன்முதலில் தேமுதிகவில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதனைத் தொடர்ந்து தேமுதிகவில் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து அதிமுகவில் இணைந்து ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது புள்ளி விபர பேச்சினை கேட்ட ஜெயலலிதா, பள்ளிகல்வித்துறை அமைச்சராக நியமித்தார்.
நீங்க அம்மா அதிமுக போரதா சொன்னாங்க ?? பொய்யா அது .. பாஜக விற்கு போரிங்களா ??
— Swathi S (@SwathiKovai) July 29, 2017
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் திடீரென ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறியதால் அமைச்சர் பதவி பறி போனது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் மாஃபா பாண்டியராஜன்.