சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக ஆதரவு: சந்திரகுமார்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் சந்திரகுமார் தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததற்கு, தேமுதிக கொள்கை பரப்பு செயலராகச் செயல்பட்டு வந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீக்கினார்.

இதையடுத்து தேமுதிக அதிருப்தியாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர் "மக்கள் தேமுதிக' எனும் புதிய அமைப்பை உருவாக்குவதாக சந்திரகுமார் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், தேமுதிகவில் இருந்து விலகிய பார்த்தீபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் தேமுதிக நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இது தொடர்பாக நாளை காலை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் போட்டியிட தயாராக உள்ளதாகவும் சந்திரகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications