இலவச மினரல் வாட்டர், பால் விலை குறைப்பு.. வெளியானது ம.ந.கூ தேர்தல் அறிக்கை
சென்னை: 80 பக்கங்கள் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இதனை வெளியிட்டார். கூட்டணி ஆட்சி அமைப்பது, லோக்ஆயுக்தா அமைப்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி, தேமுதிக, வாசனின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
தேமுதிக 104 தொகுதிகள், மதிமுக 29 தொகுதிகள், தமாகா 26 தொகுதிகள், விடுதலை சிறுத்தை 25 தொகுதிகள், இ.கம்யூனிஸ்டு 25 தொகுதிகள், மார்க்சிஸ்டு 25 தொகுதிகள் போட்டியிடுகின்றது.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கு வைகோவுக்கு கால தாமதம் ஆகியதால், 12.30 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இதனை வெளியிட்டார். 80 பக்கம் கொண்ட அறிக்கையில் சில குறிப்பிட்ட அம்சங்களை வைகோ வாசித்தார்.
லோக்ஆயுக்தா சட்டம் கொண்டுவருவது
மாணவர்கள் கல்விக்கடன் முழுக்க தள்ளுபடி
பால் விலை குறைக்கப்படும்
போக்குவரத்து கட்டண உயர்வு இருக்காது
சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் ஏற்படுத்தப்படும்
கர்ப்பிணிகளுக்கு இலவச பஸ் பாஸ்
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனி சிறப்பு பஸ் இயக்கப்படும்
முதியவர்களுக்காக நடமாடும் மருத்துவ சேவை வாகனம் இயக்கப்படும்
இலவச மினரல் குடிநீர் வழங்கப்படும்
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்போம்
சில்லரை வணிகத்தை பாதுகாக்க ம.ந.கூட்டணி முழு முயற்சி செய்யும்
வழக்கு விசாரணை இன்றி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்
மத நல்லிணக்கம் பேணப்படும்
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு தலித்துகளுக்கான சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு பல அறிவிப்புகளை வைகோ வெளியிட்டார்.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக மற்றும் தமாகா கட்சிகள் ஏற்கனவே தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.