பிரதமர் கனவுடன் இருக்கும் ஜெயலலிதா, மமதா, மாயாவதி தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?
சென்னை: நாட்டின் அடுத்த பிரதமர் தாமே என்று கனவு கொண்டிருக்கும் டஜன் கணக்கிலான தலைவர்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரும் உண்டு. ஆனால் இந்த மூவரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று..
லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியோ 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதேபோல் பிரதமர் கனவுடன் இருக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் கூட 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படக் கூடிய ராகுல் காந்தியும் அமேதியில் களமிறங்குகிறார். ஆனால் ஜெயலலிதா, மமதா, மாயாவதி ஆகிய மூவரும் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை என்பது கவனித்தக்கது.
அதிக இடங்களே வியூகம்
தேர்தலில் போட்டியிட இந்த மூவருமே சூறாவளி பிரசாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.. இவர்களது வியூகம் முழுவதுமே பெரும்பான்மை இடங்களை தமது கட்சி கைப்பற்ற வேண்டும் என்பது மட்டும்தான்...
மூவர் வசம் 167 தொகுதிகள்..
தமிழகம், புதுவையில் 40, உத்தரப்பிரதேசத்தில் 80, மேற்கு வங்கத்தில் 48 என மொத்தம் 167 தொகுதிகளில் இந்த மூவரும்தான் முதன்மை போட்டியாளர்களும் கூட... தங்களது மாநிலத்தில் அதிகமாக தொகுதிகளைக் கைப்பற்றினால் அடுத்த ஆட்சி தங்களுடையதாகவோ அல்லது தாங்கள் அங்கத்துவம் வகிக்கிற ஆட்சியாகவோ இருக்கும் என்பதுதான் இவர்களது கணக்கு.
மாயாவதி வகுத்துள்ள யுக்தி!
மாயாவதியைப் பொறுத்தவரையில் எப்படியாவது பிராமணர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகளைக் கவர்ந்துவிடுவது என்பதுதான் அவரது வியூகம். இதற்காகவே 21 பிராமணர்கள், 19 இஸ்லாமியர்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளார் மாயாவதி.
ஜெ.வின் கணக்கு இது!
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளில் குறைந்தபட்சம் 20 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்றிவிடுவது என்பது இலக்கு.
3வது இடத்துக்கான இலக்குடன் மமதா
மமதா பானர்ஜியும் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பவர். அவர் பல மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தி தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த 3வது கட்சி திரிணாமுல்தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவர்.
எட்டிவிடும் தூரத்தில் பிரதமர் பதவி
இந்த இலக்குகளைக் கொண்டுதான் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தங்களது பிரசாரத்தை முடக்கிக் கொள்ளாமல் சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கின்றனர். 167 தொகுதிகளில் கணிசமானவற்றை இம்மூன்று பேரும் கைப்பற்றிவிட்டால் இவர்களது பிரதமர் கனவு எட்டுவிடும் தூரம்தான்!