தீபாவளிக்கு டிரஸ் எடுத்து தராத கணவர்.. திட்டிய மனைவி.. விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை
தீபாவளி பண்டிகைக்கு புது துணி எடுத்துத் தராததால் மனைவி திட்டியதை தாங்க முடியாத கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை: தீபாவளி பண்டிகைக்கு புது துணி எடுத்து கொடுக்கவில்லை என்று மனைவி திட்டியதால் மனம் உடைந்து போன கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே வடமதுரை ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். 50 வயதான இவர் ஒரு விவசாயி. இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது கணவர் ஆனந்தனிடம் புது துணி எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், அவரால் செல்வி கேட்டமாதிரி புது துணி எடுத்துத் தர முடியவில்லை. இதனால் செல்வி கடும் கோபம் அடைந்திருக்கிறார். தீபாவளிக்குக் கூட புதுத் துணி எடுத்து தர முடியவில்லை என்று ஆனந்தனின் இயலாமையை சுட்டிக் காட்டி மனைவி செல்வி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ஆனந்தன் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆனந்தன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய செல்வி கணவன் மயங்கி கிடப்பதை கண்டு அதிரச்சி அடைந்தார். பின்னர், அவர் கதறியதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் செல்வியின் வீட்டில் குவிந்துள்ளனர். அவர்கள், உயிருக்கு போராடிய ஆனந்தனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனந்தன் தற்கொலை குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.