பாதுகாப்பு உபகரணம் தரவில்லை, ஆம்புலன்ஸ் இல்லை.. கோவை பாரா சைலிங் சாவு சம்பவத்தின் பகீர் பின்னணி!
கோவை: கோவையில், 'பாரா சைலிங்' விளையாட்டில் ஈடுபட்ட 53 வயது நபர் 60 அடி உயரத்தில் இருந்து விழுந்து உடல் சிதறி இழந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு மெத்தனம் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
கோவை, மருத்துவக் கல்லுாரி பொன்விழாவை முன்னிட்டு, 5ம் தேதியில் இருந்து, பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய, கோவை கிளை தலைவர் பாபு, மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி அளித்துள்ளார்.
கொடிசியா மைதானத்தில், நேற்று, பாபு தலைமையில் பயிற்சி நடந்தது. ஒரு மணி நேரத்துக்கு, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர்
நேற்று மதியம், 12:00 மணியளவில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மல்லேஸ்வர ராவ் (53) பயிற்சியில் பங்கேற்றார். இவர் இயல்பாகவே விமான சாகசங்களில் ஆர்வம் உள்ளவர் என்பதால் ஆசையோடு இதில் பங்கேற்றார்.

கூச்சல்
பாராசூட் சுமார் 60 அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென பெல்ட் அறுந்துள்ளது. இதனால் கயிற்றை பிடித்தபடியே அவர் தொங்கி சத்தம்போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் பாராசூட்டின் கீழ் பகுதியை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் அவர் கீழே விழுந்தார்.

பந்து போல எறியப்பட்ட உடல்
கீழே விழுந்ததும் பந்து போல அவரது உடல் மீண்டும் மேலே தூக்கி எறியப்பட்டது. இந்த சம்பவத்தில், இடுப்பு, முதுகு, கை, கால் மற்றும் தலையில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மல்லேஸ்வர ராவுக்கு, மனைவி, மகள், மகன் ஆகியோர் இருந்தனர். மருத்துவமனையில் அவர்கள் கதறி அழுத காட்சி பார்த்தோரை கண்கலங்க செய்வதாக இருந்துள்ளது.

முன்கூட்டியே முடிந்திருந்தது
கோவை, அரசு மருத்துவமனை, 'டீன்' எட்வின் ஜோ அளித்த பேட்டி: மருத்துவக் கல்லுாரி மைதானத்தில், பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கடந்த, 5ம் தேதி, அதிக காற்று வீசியதால், ஒரே நாளில் பயிற்சி முடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, கொடிசியா மைதானத்தில் நடந்த பயிற்சிக்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் அனுமதி வழங்கவில்லை,'' என்றார்.

பாதுகாப்பில் கடும் மெத்தனம்
'பாரா சைலிங் பயிற்சியை பொதுமக்களுக்கு வழங்க, போலீசார் மற்றும் விமான நிலைய இயக்குனரிடம் உரிய அனுமதியை நிகழ்ச்சியை நடத்துவோர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கவில்லை. ஒருவேளை பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டிருந்தால், உயிருக்கு ஆபத்தின்றி மல்லேஸ்வர ராவ் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு.

ஆம்புலன்ஸ் இல்லை
மேலும், சம்பவ இடத்தில் எந்த விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவசர உதவிக்கு ஆப்புலன்சும் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நிகழ்ச்சியை நடத்திய பாபுதான் முக்கிய குற்றவாளி என தெரிகிறது.
தலைமறைவு
போலீசார் தேடுவார்கள் என அறிந்த பாபு தலைமறைவாக உள்ளாராம். 3 நாட்களுக்கு முன்பு, கொடிசியாவில் பணிபுரியும், வயதான காவலாளி ஒருவர் ஆசைப்பட்டு பாரா சைலிங்கில் ஈடுபட்டுள்ளார். காற்று அதிகமாக வீசியதால் அவர் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். நல்ல வேளையாக லேசான காயத்தோடு அவர் தப்பியுள்ளார். இருப்பினும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். காவல்துறையும் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications