வெளிநாடு செல்வதை எதிர்த்த மனைவி கழுத்தை அறுத்து கொலை.. கணவன் தற்கொலை முயற்சி
வெளிநாடு செல்வதை எதிர்த்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, தற்கொலைக்கு முயன்ற கணவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லுாரில் வெளிநாடு செல்வதை எதிர்த்த மனைவியை அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, கணவனும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரம் 3வது தெருவைச் சேர்ந்த யூனஸ் மகன் அப்துல்காதர். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவருக்கு இதே பகுதியை சார்ந்த உசேன் என்பவரது மகள் தஸ்லீமா என்பவருக்கும் கடந்த 5மாதங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
திருமணத்திற்கு பின் உள்ளூர் ஓட்டலில் வேலை பார்த்தார். வேலை பிடிக்காததால் வெளி நாடு செல்ல முயற்சி எடுத்தார். இதற்கு தஸ்லீமா எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை அப்துல்காதர், வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், இருவருக்கும் கடுமையான சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இருவரிடையே ஏற்பட்ட தகராறில் தஸ்லீமாவின் கழுத்தை அரிவாள் மனையால் அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின் அவரது உடலை சமையல் அறையில் மறைத்து விட்டு, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் அப்துல்காதர். இதனிடையே வீட்டிற்கு வந்த உறவினர் இதனைக் கண்டு அலறி கூச்சல் இட அக்கம் பக்கத்தினர் வந்து உயிருக்கு போராடிய அப்துல்காதரை மீட்டு நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து இறந்த தஸ்லீமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடையநல்லூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.