திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது: தமிழருவி மணியன்
திருப்பூர்: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூரில் தமிழருவி மணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையில் தான் போட்டி நிலவும். இத்தேர்தலில் தி.மு.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும்.
தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க ம.தி.மு.க, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை உடன்பாடு செய்து, அது இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது. பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று ராமதாஸ் கூறியுள்ள போதிலும், மோடியை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார். இருப்பினும், பா.ம.க. தலைவர்கள் டெல்லியில் பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசி இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் இரண்டு முறை தனிப்பட்ட முறையில் நான் பேசினேன். அதன்பின் பா.ஜ.க., தலைவர்களும் அவரிடம் பேசினர். பா.ஜ.க.வுடன் உறவு இல்லை என்று விஜயகாந்த் இதுவரை கூறவில்லை. தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேரக் கூடாது. அப்படிச் சேர்ந்தால் அது விஜயகாந்திற்கு வீழ்ச்சியாக அமையும் என்று சுட்டிக் காட்டுகிறேன்.
தே.மு.தி.க.வின் நலன், தேசிய நலன், தமிழக நலன் கருதி விஜயகாந்த் பா.ஜ.க.வின் கூட்டணியில் சேர வேண்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் நோக்கம் என்பது, தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு எதிரான மாற்று அணியை உருவாக்குவதே என்றார்.