ஊர் ஊராக விடாது நடக்கும் ஆபரேசன் ஸ்டாலின்... தேமுதிக, மதிமுகவினரை இணைக்க ஆர்வம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற ஆளும்கட்சியினர் சதி திட்டம் தீட்டுவார்கள். இந்த சதியை நாம் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைய பிற கட்சியினர் தேதி கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தேதி தர முடியாதபடி திணற வேண்டி இருக்கிறது என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கூட்டணிக்கு வராத கட்சிகளை கரைக்க துவங்கிய 'ஆபரேசன் ஸ்டாலின்' இன்னும் திமுகவில் முடிந்த பாடில்லை. தேர்தலில் திமுக தோற்று எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்தாலும் தி.மு.க.வில் இணையும் விழாக்கள் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலானோர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் இருந்து ஏராளமானோர் திமுகவினர் இணைந்து வருகின்றனர். கோவைக்கு நேற்று மாலை வந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கோவை மாவட்ட தேமுதிக அவைத்தலைவர் எஸ்.எம்.எஸ்.தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன், மதிமுக குனிசை பகுதி செயலாளர் செந்தில்குமார், த.மா.கா மாநில செயலாளர் குல்பி தங்கராஜ் ஆகியோர் உள்பட 250 பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் இன்றைய காலக்கட்டத்தில் திமுக ஆட்சி பொறுப்பில் இல்லை. ஆனால், ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களை தட்டிக்கேட்கும் நிலையில் உள்ளது என்றார்.
சதியை முறியடிப்போம்
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 மாதத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அன்றாடம் நடக்கிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றிபெற ஆளும்கட்சியினர் சதி திட்டம் தீட்டுவார்கள். இந்த சதியை நாம் இணைந்து முறியடிக்க வேண்டும்.
பலம் வாய்ந்த் எதிர்கட்சி
தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இல்லை. அவ்வளவு தான். சட்டமன்றத்தில் 89 எம்.எல்.ஏ.க்களுடன் பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தி.மு.க உள்ளது. ஆட்சி செய்யும் இடத்தில் இல்லாவிட்டாலும், ஆட்சி செய்பவர்களை தட்டிக்கேட்கும் இடத்தில் தி.மு.க உள்ளது.
மக்களுக்கான இயக்கம்
தி.மு.க தேர்தல் களத்தில் பலமுறை வென்றுள்ளது. பலமுறை தோற்றுள்ளது. வெற்றியால் வெறி கொண்டு அலைந்ததும் இல்லை. தோல்வியால் துவண்டதும் இல்லை. தி.மு.க தேர்தலுக்கான இயக்கம் அல்ல. மக்களுக்கான இயக்கம்.
இணைப்பு விழாக்கள்
தி.மு.க இன்று ஆட்சியில் இல்லை. ஆனாலும், திமுகவை நாடி தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைய பிற கட்சியினர் தேதி கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தேதி தர முடியாதபடி திணற வேண்டியுள்ளது. அடுத்தடுத்து, பிறகட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாக்கள் தினமும் நடக்கிறது.
ஸ்டாலின் ரொம்ப பிஸி
வழக்கமாக ஆளுங்கட்சியில் சென்று தான் பிற கட்சியினர் இணைவார்கள். ஆனால், தி.மு.க.வில் இணைய காரணம். தி.மு.க மீதுள்ள நம்பிக்கை தான் என்றார் ஸ்டாலின். திருப்பூர், வெள்ளகோவிலில் மாற்று கட்சியினர் இன்று இணைகின்றனர். இதன் தொடர்ச்சியாக 17ம் தேதி சேலத்தில் மக்கள் தே.மு.தி.க.வை கலைத்து தி.மு.க.வில் இணையும் விழா ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. தமிழகம் முழுவதும் பிற கட்சியினரை இணைக்கும் விழாக்கள் இனி தொடர்ந்து நடைபெறும்.