மதிமுகவின் விக்கெட்டுகளை குறிவைத்து வீழ்த்தும் ஸ்டாலின்... வைகோவின் எதிர்காலம்?
சென்னை: சட்டசபை தேர்தலுக்குள் மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் 15 பேரையாவது திமுகவில் இணைத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட ஸ்டாலினின் எண்ணம் கிட்டத்தட்ட ஈடேறிவிட்டது என்றே கூற வேண்டும். பாலவாக்கம் சோமு தொடங்கி தூத்துக்குடி ஜோயல் வரை வைகோவின் தளபதிகள் கிட்டத்தட்ட 8 பேர்வரை திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். அவர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி என்று கூறிவிட்டு திடீரென கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதுதான் மாவட்ட செயலாளர்களுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமையன்று ஸ்டாலின், கருணாநிதி முன்னிலையில் இணைந்த குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்களும் இதனையே கூறியுள்ளனர்.
எங்களுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபடுவோம். தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும். இது தான் மக்கள் தீர்ப்பாக அமையும் என்று கூறியுள்ளனர் தூத்துக்குடி ஜோயல், நெல்லை பெருமாள், சரவணன், குமரி தில்லை செல்வம். ஆனாலும் ஸ்டாலின் அதி தீவிர முயற்சியே மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைய காரணம் என்று கூறப்படுகிறது.
மக்கள் நலக் கூட்டணி
2016 சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழரசுவின் மகன் திருமணத்திற்கு வந்த வைகோவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருந்தன. ஆனால் திடீரென்று கோவில்பட்டியில் பேசிய வைகோ திமுக, அதிமுக உடன் கூட்டணி இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தனி அணியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக வைகோ அறிவித்தது ஸ்டாலினின் கோபத்தை அதிகரித்து விட்டது.
ஆபரேசன் மதிமுக
திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து வைகோ கூட்டணி அமைக்கவே, மதிமுகவின் மாவட்ட செயலாளர்களை குறிவைத்து ஆபரேசனை ஆரம்பித்தார் ஸ்டாலின். வடமாவட்டங்கள் தொடங்கி தென் மாவட்டங்கள் வரை வைகோவின் தீவிர விசுவாசிகளை நோக்கி வலைவீசினார் ஸ்டாலின்.
மாவட்ட செயலாளர்களுக்கு குறி
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வைகோவின் தீவிர விசுவாசியுமான பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், ம.தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் விலகி தி.மு.க.வில் இணைந்து ம.தி.மு.க. தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தனர்.
விலகிய தலைவர்கள்
தமிழகத்தில் இன்றும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு மாற்று அணியாக மக்கள் நல கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக மாற்ற வைகோ முயற்சி செய்து வரும் நிலையில், அக்கட்சியில் முன்னணி தலைவராக இருந்த மாநில பொருளாளர் மாசிலாமணி திடீரென விலகினார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த டாக்டர் சரவணன் விலகி, பாஜகவில் இணைந்தார்.
கருணாநிதியின் விருப்பம்
கடந்த அக்டோபர் மாதம் கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் பரணி கே.மணி மற்றும் மதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய கருணாநிதி, திமுகவை வலுவாக்க மேலும் பலர் கட்சியில் இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.திமுகவை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த இடைவெளி பள்ளத்தை ஏற்படுத்தியவர்கள் அதிலேயே விழுந்து கிடக்கிறார்கள் என்றும் கூறினார் கருணாநிதி.
தென் மாவட்ட செயலாளர்கள்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. அதேபோலவே நான்கு மாவட்ட செயலாளர்களுடன் 12 நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
திமுக உடன் கூட்டணி
செய்தியாளர்களிடம் பேசிய நால்வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கட்சி தொண்டர்களின் கருத்தை ஒரு போதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார். கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் களத்தில் ம.தி.மு.க. தொண்டர்கள் பம்பரமாய் சுற்றி களப்பணியாற்றினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இம்முறை தி.மு.க.வுடன் கூட்டணி சேருவோம் என்று கூறி வந்தார்.
அதிமுகவிற்கு மறைமுக உதவி
திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக மாறும் என்றார். அ.தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று சொல்லி வந்தவர் மறைமுகமாக அ.தி.மு.க.விற்கு உதவும் வகையில் செயல்பட தொடங்கினார். கட்சி நிர்வாகிகளின் கருத்தை வைகோ கேட்கவில்லை. தனது கருத்தை ஏற்போர் மட்டும் என்னுடன் இருங்கள் என்று பகிரங்கமாக பேசினார். இது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொதுச்செயலாளரே எங்களை கட்சியைவிட்டு வெளியேற சொன்னபிறகு ம.தி.மு.க.வில் நீடிப்பது சரியாக இருக்காது என்று நாங்கள் முடிவுசெய்தோம்.
திமுகவில் இணைப்பு
இன்றைக்கு வலுவில்லாத கூட்டணி அமைத்து கட்சியை பலவீனப்படுத்தி விட்டார். மக்கள் நல கூட்டணி தேர்தலில் வெற்றி பெறாது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். வைகோ மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மக்களையும், தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறார். அதனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாங்கள் இன்றைக்கு தாய் கழகத்தில் இணைந்து இருக்கிறோம் என்று கூறியுள்ளனர். எங்களுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
என்ன லாபம் இருக்குய்யா?
அதேநேரத்தில் மதிமுகவின் தென் மாவட்ட செயலாளர்களை திமுகவில் இழுக்கும் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை கருணாநிதிக்கு பிடிக்கவில்லையாம். இப்போது நாம் மோத வேண்டிய ஆள் வைகோவா? என்று கேட்டதோடு, இவர்களுக்கு பதவி கொடுத்தால் கட்சியில் ஏற்கனவே இருப்பவர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா என்று கேட்டாராம். ஆனாலும் அதைப்பற்றி ஸ்டாலின் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஆரம்பமே அமர்களம்தான்
கருணாநிதி சொன்னது போலவே, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 4 மாவட்ட மதிமுக செய லாளர்கள் திமுகவில் இணைந்த போது, திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதிலிருந்தே பூசல் ஆரம்பித்து விட்டதை புரிந்து கொள்ளலாம்.விடாது தொடரும் ஆபரேசன்
வைகோவின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கலிங்கப்பட்டிக்கு சென்றிருந்த ஸ்டாலினிடம், இயல்பாகவே பேசினார் வைகோ, அதன்பின்னர் ஒரு மாத இடைவெளியில் என்ன நடந்ததோ மீண்டும் ஆள் இழுப்பு படலம் ஆரம்பிவிட்டது. மதிமுகவில் இருந்து மேலும் சில மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாகவும், அதற்கான முயற்சியில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைகோவின் நிலை என்ன?
கலிங்கப்பட்டியில் கண்மாய் உடையக் கூடாது என்று கரையை பலப்படுத்திய வைகோ, கட்சிக்குள் இருக்கும் ஓட்டையை அடைக்காமல் விட்டு விட்டாரே என்று கவலைப்படுகின்றனர் அவரது நலம் விரும்பிகள். ஆனாலும், ஜோயலையும், தில்லை செல்வத்தையும் தொடர்பு கொண்டு வைகோ பேசியும், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் திமுகவில் இணைந்து விட்டனராம்.