நினைவிடம்: வாக்கு தவறிய மத்திய அரசு, பொறுமையாக இருக்கும் கலாம் குடும்பத்தார்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் மத்திய அரசு எப்பொழுது தான் நினைவிடம் அமைக்கும் என்று பார்க்கலாம் என்று அவரது குடும்பத்தார் பொறுமையாக உள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் அந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இதுவரை உள்ளது.

சமாதி
கலாமின் சமாதியை காண தினமும் ஏராளமானோர் வருகின்றார்கள். இந்நிலையில் அவரது சமாதி இருக்கும் இடம் போதிய கவனிப்பு இன்றி நாய்கள், மாடுகள் உலாவும் இடமாக உள்ளது.

பொறுமை
கலாமின் சமாதி இருக்கும் இடத்தில் மத்திய அரசு நினைவிடம் கட்டும் வரை பொறுமையாக இருக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலாம் குடும்பத்தாருக்கு போன் செய்து பேசியுள்ளார்.

பொன். ராதாகிருஷ்ணன்
கலாமின் சமாதி இருக்கும் இடத்தில் நினைவிடம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படும் என்றும், தான் விரைவில் ராமேஸ்வரம் வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விரைவில்
கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் நினைவிடப் பணிகள் துவங்கப்படும் என்று டிஆர்டிஓ வாக்களித்துள்ளது. கலாம் நினைவிடம் அமைக்க நிலம் குறித்து அவரது குடும்பத்தார் மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசியுள்ளனர். அவர் அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்ததாக கலாமின் குடும்பத்தார் கூறியுள்ளனர். மேலும் தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் மத்திய அரசு, டிஆர்டிஓ, கலாமின் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு அவர்கள் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

செய்தித்தொடர்பாளர்கள்
கலாம் குடும்பத்தார் முதல்முறையாக 3 செய்தித்தொடர்பாளர்களை நியமித்துள்ளனர். ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம், ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் தாவூத் மற்றும் ஜி.கே. மொய்னுதீன் ஆகியோர் தான் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கலாமின் முன்னாள் உதவியாளர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு மீடியாவிடம் தகவல்களை தெரிவிப்பது கலாம் குடும்பத்தாரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. கலாமின் பெயரை அவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருக்கவே 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நினைவிடம்
கலாமின் பெயரை பயன்படுத்தவோ, புதிய இயக்கங்கள் துவங்கவோ யாருக்கும் நாங்கள் அனுமதி அளி்கவில்லை. அண்மையில் செய்தித்தாள் ஒன்றில் கலாம் நினைவிடத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். நிதி ஒதுக்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கே தெரியவில்லை. நினைவிடம் குறித்து எங்களை தொடர்பு கொள்வதாகத் தான் மத்திய அரசு தெரிவித்தது என்று கலாம் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கையெழுத்து
கலாம் சமாதி இருக்கும் இடத்தில் விரைவில் நினைவிடம் அமைக்கக் கோரி அவரின் 99 வயது அண்ணன் ஏ.பி.ஜே.எம். மரைக்காயர் ஆன்லைனில் கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளார். அதற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications