ராமேஸ்வரத்தில் மன நலம் பாதித்தவர் மீது இரக்கமில்லா தாக்குதல்.. குளத்தில் சடலம் மீட்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மனநலம் பாதித்தவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயங்களுடன் அங்கிருந்து சென்ற அவர் 3 மணிநேரத்தில், குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதித்தவர்களை அவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, ராமேஸ்வரம் பகுதிகளில் விட்டுச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. ராமேஸ்வரம் நகரில் மனநலம் பாதித்த 100க்கும் மேற்பட்டோர் சுற்றித்திரிகின்றனர். இவர்களால் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசல் பகுதியில் நேற்று காலை மனநலம் பாதித்த ஒரு நபர் சுற்றித்திரிந்தார். ஆடைகள் கலைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர், மரக்கட்டை, குச்சியால் அவரை சரமாரியாக தாக்கினர். கால்களாலும் உதைத்தனர்.
இதனால் படுகாயமடைந்த நிலையில் அவர் கிடந்தார். மனிதாபிமானமுள்ள சிலர் அவரை மீட்டு ஆடைகளை சரி செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தடுமாறியபடியே நடந்து சென்ற அவர், காலை 11 மணியளவில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில், நம்புநாயகி அம்மன் கோயில் அருகேயுள்ள குளத்தில் இறந்து மிதந்தார்.
அப்போது அவர் நிர்வாண நிலையில் கிடந்தார். மனநலம் பாதித்தவர் தாக்குதலுக்கு ஆளான 3 மணிநேரத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கோயில் குளம் சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ளது. தாக்கப்பட்ட நபர் குளத்திற்கு எப்படி வந்தார், அவர் தானாக குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது சடலத்தை யாரும் குளத்தில் போட்டுச் சென்றனரா என்பது குறித்து தனுஷ்கோடி போலீசார் விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications