டெல்டா மாவட்ட மீத்தேன் வாயு திட்டத்தால் நில நடுக்கம் வரும்: நிபுணர் எச்சரிக்கை
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால், நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர் சங்க மாநிலச் செயலர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில், காவிரி பாசனப் பகுதிகளைப் பாலைவனமாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கருத்தரங்கு, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இதில், மீத்தேன் திட்ட பாதிப்புகள் குறித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. அதில் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதன்பிறகு நிருபர்களிடம் வீரப்பன் கூறியதாவது: மீத்தேன் திட்டத்திற்காக, விளை நிலங்களில் 50 இடங்களில் 2 ஆயிரம் ஆழ்துளை கிணறுகளை 5 ஆயிரம் அடி ஆழம் வரை அமைத்து, இடையில் உள்ள நிலக்கரிப் படுகையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி மீத்தேன் வாயு எடுக்கப்படும். அந்த இடத்தில் மீத்தேன் வாயு எடுத்து முடித்த பிறகு, எதிர்காலத்தில் நிலக்கரி எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மீத்தேன் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதி முழுவதும் காவிரி பாசனப் பகுதியில் உள்ளது. மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். நிலத்தடி நீர் முழுமையாக மாசுபடும். இந்தத் தண்ணீரைக் குடிக்கவும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாது.
இதனால் காவிரி டெல்டாவில் உள்ள பாரம்பரியமாக உள்ள 13 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும். மீத்தேன் வாயு எடுக்கும்போது வெளியேற்றப்படும் நீரால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் உள்புகும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலத்தடி முழுவதும் உவர்ப்பு நீராக மாறும். மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் நிலப்பரப்பே 20 அடி கீழே இறங்கும் அபாயமும் உள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயில் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள், புராதனச் சின்னங்கள், ஏரிகள் பாதிப்புக்கு உள்ளாகும். இதையெல்லாம்விட, மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படும். டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கு வாழ முடியாமல், வேறு பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை ஏற்படும். எனவே, காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.