கர்நாடகம் கைவிட்டாலும் கை கொடுத்த வருணன்.. மழையால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வராவிட்டாலும் கூட தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தொடும் நிலையில் உள்ளது.
தற்போது பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. நீர்வரத்தும் சீராக உள்ளது. எனவே விரைவில் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நன்றாகவே உள்ளது.
கடந்த ஒரு வாரமாக அணைக்கு விநாடிக்கு 9000 கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 88 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,978 கனஅடியாகவும், நீர் இருப்பு 50.33 டிஎம்சியாகவும் இருந்தது.
கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் 65 அடி அளவிற்கு சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜனவரி 28ம் தேதி வரை முழுமையாக தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த ஒரு மாதமாக 500 கனஅடி அளவிற்கு தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதே நேரத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீர் வரத்து இதே நிலையில் நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர் மட்டம் 90 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளது.
மேலும் வடகிழக்குப் பருவ காலம் டிசம்பர் இறுதி வரை இருப்பதால், மழையும் தொடர்ந்து பெய்து வந்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது.
தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்ட நிலையில் இயற்கை கை கொடுத்து மேட்டூர் அணையை நிரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.