எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாள்.. அதிமுகவினர் உற்சாகம்.. சிலைக்கு மாலை அணிவித்தார் ஜெ.
சென்னை: எம்.ஜி.ஆரின். 99வது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் வருகை தந்தார். பின்னர், அங்கிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறந்தநாள் சிறப்பு மலர்...
அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 99-வது ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். இருதொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் பெற்றுகொண்டனர்.

தொண்டர்கள் பங்கேற்பு...
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாய பிரிவு மீனவர் பிரிவு மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

வரவேற்பு ஏற்பாடுகள்...
ஜெயலலிதா வருகையையொட்டி தலைமை கழகத்தில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தன. சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

கோஷம்...
ஜெயலலிதாவை நேரில் கண்டதும் அங்கு கூடியிருந்த தொண்டர்களும், மகளிர் அணியினரும் ‘புரட்சித் தலைவர் வாழ்க', புரட்சித் தலைவி வாழ்க' என்று முழக்கமிட்டனர்.

இனிப்பு வழங்கினார்...
கூடியிருந்த கட்சி தலைவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஜெயலலிதா பின்னர் அங்குள்ள மக்களை நோக்கி கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பச்சைக்கலர் சேலை...
பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த சிறுவர்களுக்கு எம்.ஜி.ஆர். வேடமிடப்பட்டிருந்தது. இதேபோல், பெண்களும் பச்சைக்கலர் சேலை அணிந்து வந்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்:
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். படங்களுக்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்தும், கட்சிக் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications