சென்னையில் லேசான நில அதிர்வு... அச்சத்தில் வெளியேறிய மக்கள்
சென்னை: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பாதிப்பினால் சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சில நொடிகள் ஏற்பட்ட இந்த அதிர்வு காரணமாக அச்சமடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.7ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தானில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜார்ம் பகுதியை மையமாகக் கொண்டு 105 கிலோ மீட்டர் ஆழத்தில் பிற்பகல் 2.39 மணிக்கு ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டது. ஸ்ரீநகர், பஞ்சாப், டெல்லி, இமாச்சல், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு எற்பட்டுள்ளது. வட இந்தியாவில் ஏற்பட்ட நில அதிர்வை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம், நந்தனம் மற்றும் கோயம்பேடு, மணலி ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்களில் லேசாக அதிர்வு ஏற்பட்டது.
30 முதல் 40 நொடிகள் வரை நில அதிர்வு உணரப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். கோடம்பாக்கம், நந்தனம், கிண்டி ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அலுவலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அவசரம் அவசரமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ள சென்னைவாசிகள், நில அதிர்வினால் ஏற்பட்ட பீதி அகலாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.
வட இந்தியாவில் நில நடுக்கம் ஏற்படும் பொழுதெல்லாம் சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications