குமாரபாளையம் அருகே கோர விபத்து.. வேனும் மினி லாரியும் மோதி 5 பெண்கள் பலி.. 20 பேர் படுகாயம்
வேனும்-லாரியும் மோதியதில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
Recommended Video
நாமக்கல்: குமாரபாளையம் அருகே வேனும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே உள்ளது வெப்படைப் பகுதி. இங்கு ராஜகுரு ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நூற்பாலைக்கு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று இந்த நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
நாணத்தண்டு பள்ளம் என்ற இடம் அருகே வந்தபோது, திடீரென வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் எதிரே வந்து கொண்டிருந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன்பகுதி பயங்கர சத்தத்துடன் நொறுங்கியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் உயிருக்கு போராடியவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தொடர்ந்து படுகாயமடைந்தோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேனின் ஸ்டியரிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.