அரசு விழாவில் அமைச்சரின் வாரிசு... ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக ஆயத்தம்.. நெருக்கடியில் அதிகாரிகள்...!
ராணிப்பேட்டை: அரசு விழாவில் அமைச்சர் காந்தியின் மகன் பங்கேற்ற விவகாரம் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுகவினரை உஷ்ணப்படுத்தியுள்ளது.
அரசு விழாவில் பங்கேற்கும் அளவுக்கு அமைச்சரின் மகன் சட்டமன்ற உறுப்பினரா, நாடாளுமன்ற உறுப்பினரா, அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் தான் ஏதேனும் பதவியில் இருக்கிறாரா என ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான ரவி வினவியுள்ளார்.
இது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்தால் கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அவர் கூறியிருக்கிறார்.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் ஜமாபந்தி நிறைவு விழா கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அதில் கைத்தறித்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான காந்தியின் இளையமகன் சந்தோஷ் கலந்துகொண்டு துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த புகைப்பட வெளியானது முதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன தகுதி?
இந்நிலையில் அமைச்சரின் மகன் என்ற ஒரே தகுதியை தவிர சந்தோஷுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை எனக் கூறியுள்ள அதிமுக மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான ரவி மக்களாட்சியை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக சாடியுள்ளார். அதோடு விடாமல் இது தொடர்பான கட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம்
அதிகாரிகள் அடங்கிப் போகிறார்களா ? அல்லது அடக்கப்படுகிறார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ள ரவி, இதனை தெளிவுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மன்னராட்சி நடத்தும் போக்கை அமைச்சர் காந்தி கைவிட வேண்டும் என்றும் இதே நிலை தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

அரசு விழா
ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் அமைச்சரின் மகனுக்கு எதிராக முணுமுணுத்து வரும் சூழலில், இப்போது அரசு விழா ரூபத்தில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இதனிடையே இந்த நிகழ்வு தொடர்பான தகவல் உளவுத்துறை மூலம் முதலமைச்சரின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications