ஷூட்டிங் வேறு மீட்டிங் வேறு... ரஜினி எப்போது உணர்வாரோ... ஜெயக்குமார் சரமாரி விமர்சனம்
சென்னை: திமுகவினரை தன் பக்கம் இழுக்கவே அதிமுக மீது ரஜினி விமர்சனம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங் வேறு மீட்டிங் வேறு, இவை இரண்டும் ஒன்றாகிவிடாது என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
கருணாநிதிக்கு தமிழக திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் அதிமுக தொடங்குவதற்கு காரணமாக இருந்தவரே கருணாநிதிதான். அத்தகைய தலைவருக்கு மரியாதை செலுத்த மெரினாவில் முதல்வரும் அமைச்சரவையும் இருந்திருக்க வேண்டாமா என்று ரஜினி கேள்வி எழுப்பியிருந்தார்.
ரஜினி அரசியல்
இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சியில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத நேரத்தில் ரஜினி பேசுவது சந்தர்ப்பவாத அரசியல்.
5 வழக்குகள் நிலுவை
அந்த அரசியல் இங்கு எடுபடாது. திமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்கவே ரஜினி அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டனர். அங்கு 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவருக்கு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததே இடம் கொடுக்காததற்கு காரணம்.
முழு நேர அரசியல்வாதி
மறைந்த தலைவருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு மரியாதை செய்துள்ளது. தமிழக அரசியலில் என்ன நடந்தது என்றே ரஜினிக்கு தெரியாது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் பார்ட் டைம் அரசியல்வாதியாக இருந்த ரஜினி முழு நேர அரசியல்வாதியாக மாற முயற்சிக்கிறார்.
ஜெயக்குமார் விமர்சனம்
அரசியல் வரலாறே தெரியாமல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார் ரஜினி. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ஒளிந்து கொண்டிருந்தவர் இப்போது பேசுகிறார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.