அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் - மைத்ரேயன் எம்.பி 'அசால்ட் கமெண்ட்'
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி கருத்துத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: தமிழக அமைச்சர்களிலேயே ஜோக்கர் ஜெயக்குமார் தான் என மைத்ரேயன் எம்.பி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மைத்ரேயன் எம்.பியிடம் அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மைத்ரேயன் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் தான் பேச்சுவார்த்தை பின்னடைவுக்குக் காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'அமைச்சர்களிலேயே ஜெயக்குமார் தான் ஜோக்கர்' என மைத்ரேயன் எம்.பி கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர்களும் ஒபிஎஸ் அணியைச் சார்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வந்ததால், பேச்சுவார்த்தை பின்னடவை சந்தித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி அணியிலும் ஒபிஎஸ் அணியிலும் பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மைத்தேரயன் எம்.பி அமைச்சர் ஜெயக்குமாரை ஜோக்கர் என கூறியுள்ளதால் இணைப்பு பேச்சு வார்த்தை பின்னடைவைச் சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரை ஓபிஎஸ் அணியினரும் தினகரன் அணியினரும் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.