உளுத்தம் பருப்பேதான் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை... அமைச்சர் காமராஜ் புது பதில்!
ரேஷன் கடையில் உளுத்தம் பருப்பு தான் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை என்று அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் : ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு தான் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷனில் சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் குறைந்த விலையில் அரிசி என்று தொடக்க காலத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டம் கொண்டு வரப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொதவிநியோகத்திட்டத்தில் பெரிய அளவில் பாதகம் இல்லாமல் மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆதார் எண் அடிப்படையில் பொருட்கள்
ஆனால் ஜெயலலிதா எதிர்த்த உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு அதிமுக ஒப்புதல் அளித்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பொதுவிநியோகத்திட்டத்தில் பாதகம் ஏற்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையுடன் குடும்பத்தினரின் எத்தனை ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கொள்முதல் நிறுத்தம்
மேலும் சர்க்கரையின் விலையும் உயர்ந்து நவம்பர் 1 முதல் அந்த நடைமுறையும் வந்துவிட்டது. இந்நிலையில் நேற்று திடீரென இனி ரேஷன் கடைகளில் உளுத்தம்பருப்பு கிடையாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். உளுத்தம்பருப்பு கொள்முதல் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
உளுந்து தான் வேண்டும் என கேட்கவில்லை
இந்நிலையில் திருவாரூரில் இன்று பேட்டியளித்துள்ள அமைச்சர் காமராஜ், மக்கள் உளுத்தம்பருப்பு தான் வேண்டும் என்று கேட்கவில்லை என்றார். அவ்வாறு அவர்கள் கேட்டால் அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறந்து விளங்குகிறது
துவரம் பருப்பு, மசூர் பருப்பு உள்ளிட்ட 3 பருப்புகளில் ஏதாவது ஒன்று ஒரு கார்டிற்கு மாதம் ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.