நீட் தேர்வை இணையத்தில் நடத்துவது சாத்தியமில்லை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
நீட் தேர்வு இணையத்தில் நடத்துவது என்பது சாத்தியமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வு இணையத்தில் நடத்துவது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும், நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். கணினி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"நீட் உள்ளிட்ட தேர்வுகளை இணையத்தில் நடத்துவது குறித்து உத்தேசமாகத்தான் கூறியுள்ளனர். இன்னும், அது உத்தரவாக வரவில்லை. ஆனால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்பதுதான் எனது கருத்து.
மனிதவள மேம்பாட்டு நிபுணராக, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்து ஐஐஎம் தேர்வுகளை இணையத்தில் எழுத வைக்கும் முயற்சி என்பது மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது. ஐஐஎம் தேர்வுகளை ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர்.
நீட் தேர்வை அதைவிட அதிகமானோர் எழுதுகின்றனர். எனவே கணினி முறையில் தேர்வு நடத்துவது என்பது இந்தியாவில் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாது" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை கணினி மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications