இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தன் மகனை மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திடீரென்று பொதுநலப் பிரச்சினையான மின்சாரம் குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தனது அறிக்கை மூலம் வெளியிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல், அதலபாதாளத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தும் வகையிலும், இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை ஒளிமயமாக ஆக்கும் வண்ணம் மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையினை நீக்கும் வகையிலும் அல்லும், பகலும் அரும்பாடுபட்டதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் இதுகுறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, போர்க்கால அடிப்படையில் 2,500 மெகாவாட் மின்திறன் கொண்ட திட்டங்களை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத பகீரத முயற்சியின் காரணமாக, இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் ஆதாயத்திற்காக மனம் போன போக்கில் அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தி திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடுக்கிவிட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியை தொடங்கி 2500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவு திறன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, நடுத்தர கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 500 மெகாவாட் மின்சாரம் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் இருந்து 562 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது. இதுதவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 3330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 15 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் தற்போது 222 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுவருகிறது.
இது படிப்படியாக வரும் ஆகஸ்டு மாதம் முதல் 2 ஆயிரம் மெகாவாட் ஆக உயரும். மீதமுள்ள 1330 மெகாவாட் மின்சாரம் வரும் 2015-16-ம் ஆண்டில் இருந்து கிடைக்கும். முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் இறுதியில் 8 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, கடந்த 3 ஆண்டு காலத்தில், அதாவது 16-5-2014 நிலவரப்படி, 12,995 மெகாவாட் என்ற உச்ச அளவு மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவேற்றியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, கூடுதலாக 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ள 2500 மெகாவாட் மின்நிறுவு திறன், நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கின்ற 500 மெகாவாட் மின்சாரம், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கின்ற மற்றும் கிடைக்கக்கூடிய 3330 மெகாவாட் மின்சாரம், இந்த ஆண்டில் நிறுவப்பட உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின் நிறுவு திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டால், இந்த ஆண்டு 2014-15 நிதியாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் 14,500 மெகாவாட் மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிச்சயம் நிறைவேற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காணும் விளக்கத்தில் இருந்து, 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே தரக்கூடிய காற்றாலை மின்சாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கும் அனல் மின் சக்தியைக் கொண்டே தமிழகத்தின் மின் தேவை முழுமையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும், அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதையே வழக்கமாக, வாடிக்கையாக கொண்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை அடைவதற்காக எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான, முனைப்பான நடவடிக்கைகள் குறித்து குறை கூறுவது நகைப்புக்குரியது, கேலிக்கூத்தானது, எள்ளிநகையாடத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications