ரூ.1 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பில் சிக்கிய அமைச்சர் பூனாட்சி.. திருச்சி ஆட்சியரிடம் தம்பி புகார்
மண்ணச்சநல்லூர் : ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்து கொண்டதாக தமிழக அமைச்சர் பூனாட்சி மீது அவரது தம்பி கணேசன் நேற்று திருச்சி ஆட்சியரின் நேர்முக உதவியாளாரிடம் மனு கொடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நெய்வேலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெரியபூனாட்சி. இவருக்கு தங்கராஜ் (67), நடராஜ் (65), பூனாட்சி (63), கணேசன் (61). ஆகிய 4 மகன்கள் உள்ளனர். பூனாட்சி, தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராக உள்ளார். மற்ற 3 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சொத்துகளை அபகரித்துக் கொண்டதாக அமைச்சர் பூனாட்சி மீது அவரது தம்பி கணேசன், முசிறி ஆர்டிஓ ஜெயினுலாபுதீனிடம் 10 தினங்களுக்கு முன் புகார் அளித்தார். இதுகுறித்து நெய்வேலி விஏஓ விஜயபாஸ்கர் நேற்று கணேசனிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து கணேசன் கூறியதாவது...
தந்தை பெரிய பூனாட்சி பெயரில் நெய்வேலி வடக்கு பகுதியில் 1.22 ஏக்கர் இடம் இருந்தது. தந்தை இருக்கும் போது அந்த இடத்தில் பாய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கலாம் என முடிவு எடுத்து வங்கி கடன் பெற்று அங்கு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 2003 ல் தந்தை இறந்த பின், தொழிற்சாலை இயங்காமல் இருந்தது.
இதனிடையில், அமைச்சராக பதவி வகித்து வரும் பூனாட்சி,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி கடன் முடிந்துவிட்டதாகவும், அடமானம் உள்ள பத்திரத்தை மீட்க வேண்டும் என்றும் கூறி எங்கள் 3 பேரிடமும் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கினார்.
தற்போது விவசாயம் செய்து வரும் எங்களுக்கு திடீரென பணம் தேவை ஏற்பட்டது. அதற்காக தந்தை பெயரில் உள்ள 1.22 ஏக்கர் இடத்தை வைத்து கொண்டு அமைச்சரிடம் பணம் கேட்டோம். அவர் பணம் கொடுக்கமுடியாது. எனது பெயரில் உள்ள சொத்துக்கு எப்படி பணம் கொடுக்க முடியும் எனகூறிவிட்டார்.
இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். தற்போது 1.22 ஏக்கரின் மதிப்பு ரூ.1 கோடியாகும். எங்களது தந்தை பெயரில் உள்ள சொத்துகளை எங்களுக்கு தெரியாமல் அவரது பெயருக்கு போலி பத்திரம் தயாரித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றி கொண்டார். இவ்வாறு கணேசன் கூறினார்.
முசிறி கோட்டாட்சியரிடம் கணேசன் கொடுத்த மனுவில், எங்கள் குடும்பத்துக்கு பொதுவான நிலத்தை அமைச்சர் பூனாட்சி பெயரில் பட்டா செய்து கொடுத்து அவரது பெயரில் மின்இணைப்பு கொடுக்க நெய்வேலி விஏஓவும், முசிறி தாசில்தாரும் ஆவணங்கள் தயார் செய்து கொடுத்து உள்ளனர். எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்தநிலையில், நேற்று கணேசன் திருச்சி ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தார். அதில், தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications