பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் தோல்விக்குக் காரணம்... செல்லூர் ராஜூ கொந்தளிப்பு!
பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை : பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும், பாஜகவை எதிர்த்ததாலேயே தினகரனுக்கு வெற்றி கிடைத்ததாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அதிமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். ஜெயலலிதா பாணியில் இனி பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

எதிர்த்ததாலேயே தினகரன் வெற்றி
பாஜகவினரும், மத்திய அமைச்சர்களும் அதிமுக பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் தவறாக பேசுவதை மக்கள் விரும்பவில்லை. பாஜகவை எதிர்த்ததாலேயே டிடிவி. தினகரனுக்கு ஆர்கே நகரில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் அனைத்தும் கிடைத்து அவர் வெற்றி பெற்றார்.

ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்
ஒரே ஒரு முறை பாஜகவுடன் நாம் இணக்கமாக சென்றோம், அதற்கான தண்டனையை பெற்றுவிட்டோம். இனி அதிமுகவுடன் எந்த ஒட்டோ உறவோ வேண்டாம் என்றார்.

துரோகத்தால் வெற்றி
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆர்கே நகரில் தந்திரம் வெற்றி பெற்றுள்ளது, உண்மை பின்தங்கியுள்ளது. சில துரோகங்களால் அதிமுக ஆர்கே நகரில் தோல்வி கண்டுள்ளது, இனி அதிமுகவிற்கு வெற்றி முகம் மட்டும் தான் என்று தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ பல்டி
மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால் தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இதற்கு முன்னர் கூறி வந்தார். இந்நிலையில் இனி பாஜகவுடன் எந்த ஒட்டும் உறவும் வேண்டாம் என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications