என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை! மவுனம் கலைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
சென்னை: என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தனது தம்பி அசோக் வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
வருமான வரித்துறை சோதனை தொடங்கி மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு தனது மவுனத்தை கலைத்து இப்படியொரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமைச்சர் ஒருவரது வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனையா என காலை முதல் பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் செந்தில்பாலாஜி கொடுத்துள்ள விளக்கம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் ரெய்டு குறித்த விவரம் ஜப்பானில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
முதல்வரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி இது தொடர்பான விளக்கம் அளிக்க முயல்வதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே கரூரில் வருமான வரித்துறை பெண் அதிகாரியை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட நிகழ்வு, இளம் ஐடி அதிகாரியை சட்டையை பிடித்து இழுத்துச்சென்ற நிகழ்வு , கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.