சைக்கிள் கேப்பில் தமிழச்சி தங்கபாண்டியனை தங்கம் தென்னரசுவிடம் போட்டு கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் அண்ணன்- தங்கை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது தங்கை தமிழச்சி சொன்ன ஒரு விஷயத்தை அண்ணனிடம் போட்டுக் கொடுத்து அவர்களுக்கு செல்ல சண்டை மூட்டி விடும் அளவிற்கு பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். எம்எல்ஏவாக இருந்த போது குறிப்பிட்ட சில அரசு நிகழ்ச்சிகளிலும் நிறைய கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் 260 மாணவர்களுக்கு ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு பயிற்சியை இலவசமாக தமிழக அரசு வழங்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜூன் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் உண்மையான சிறப்பு விருந்தினர்கள் நீங்கள்தான்.
மாணவ செல்வங்களே உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனக்கு 63 வயது ஆகிறது என சொன்னார். அவரை பார்த்தால் 63 வயது மாதிரியா தெரிகிறது. அவருக்கு 55 வயது என சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

இன்னும் சொல்ல போனால் இளைஞர்களான என்னைவிடவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை விடவும் ஃபிட்டாக இருப்பது அவர்தான். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு செய்தியை சொன்னார். அவர் கூறுகையில் அவருடைய அண்ணன் தங்கம் தென்னரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராக இருக்கும் போது நான் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார். இதை நான் கண்டிப்பாக தங்கம் தென்னரசு அண்ணனிடம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சிறப்பான நிகழ்ச்சியை இத்தனை அழகாக ஏற்பாடு செய்திருக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ பயிற்சி நிகழ்ச்சியாகும். இதை தொடங்கி வைப்பதில் நான் பெருமைக் கொள்கிறேன். நமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதுமையான நல்ல பல திட்டங்களை முதல்வரிடம் ஆலோசனை பெற்று வாரத்திற்கு ஒன்று வழங்கி வருகிறார். அமைச்சர் மா.சு. பேசும் போது சொன்னார், இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது இன்ப அதிர்ச்சி என சொன்னார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நான் இருப்பது எனக்கே இன்ப அதிர்ச்சி. அதாவது எனக்கு வருவதற்கு சில நிமிடங்களுகக்கு முன்புதான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள போகிறேன் என்பது எனக்கு தெரியும். என்னை அப்படியே நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அன்பில் அழைத்து வந்துவிட்டார். இன்னொன்று என்னை இந்த நிகழ்ச்சியில் உட்கார வைத்திருக்கும் விதத்தை பார்த்தீர்களா.
எனக்கு லெஃப்ட் சைடில் ஹெல்த் மினிஸ்டர், ரைட் சைடில் கல்வித் துறை அமைச்சர், சென்ட்ரல்ல ஸ்போர்ட்ஸ். ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் எவ்வளவு தெரியுமா, சுகாதாரத் துறைக்கு ஆண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய், கல்வித் துறைக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி, ஸ்போர்ட்ஸுக்கு எவ்வளவு தெரியுமா, வருஷத்திற்கு வெறும் ரூ 150 கோடிதான். அதனால்தான் நான் என் துறை சார்ந்த நிகழ்ச்சிகளை விட மற்றவர்கள் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் உயர்கல்வி பயின்று ஆராய்ச்சி படிப்பு வரை பயின்று சாதனையாளர்களாக வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications