கக்கூஸ் பக்கம் ஒளிந்திருந்த "செல்லூர்" .. தூங்கி விழும் "சட்டம்":. கூவத்தூர் களேபரங்கள்!
சென்னை: ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பா என்பார்கள்.. அப்படித்தான் ஆகியுள்ளது சசிகலா கோஷ்டியின் நிலை. கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் செல்லூர் ராஜு மாயமானதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டதாம். கடைசியில் கக்கூஸ் ஒன்றின் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தாராம் அவர்.
கூவத்தூரில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களையும், அமைச்சர்களையும் மன்னார்குடி அடியாட்கள்தான் கட்டி மேய்த்து வருகினறனர். அவர்கள் என்ன கேட்டாலும் வாங்கித் தருமாறும், அதேசமயம், அவர்கள் யாரும் தப்பி விடாத வகையில் கவனமாக இருக்குமாறும் அந்தக் கும்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இதனால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விழிப்புணர்வுடன் கண்காணித்து வருகிறார்களாம் மன்னார்குடி அடியாட்கள் கும்பல். அதையும் மீறி சிலர் செய்யும் செயல்கள் அவர்களை டென்ஷனுக்குள்ளாக்கி வருகிறதாம்.
கூவத்தூர் முகாம்
கூவத்தூரில் உள்ள கேல்டன் பே ரிசார்ட்டில்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆடம்பர சிறையாக அது மாறியுள்ளது. அதாவது என்ன கேட்டாலும் கிடைக்கும். ஆனால் வெளியில் மட்டும் போக முடியாது, போக வேண்டும் என்று நினைக்கக் கூட கூடாது.
அடியாட்கள் கட்டுப்பாட்டில்
மன்னார்குடி, தஞ்சாவூரிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அடியாட்கள்தான் இவர்களை கண்காணித்து வருகின்றனர். ரிசார்ட்டை சுற்றிலும் இவர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்குத் தேவையானதை இவர்கள் செய்து வருகின்றனர்.
சொன்னபடி கேளு
என்ன வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாமாம். சாப்பாடு விஷயத்தில் குறையே இல்லையாம். என்ன கேட்டாலும் கொண்டு வந்து தந்து விடுகிறார்களாம். சாப்பாடு மட்டுமல்லாமல் சரக்கு, சிகரெட் என எது கேட்டாலும் உடனுக்குடன் கிடைக்கிறதாம்.
டிவி பேப்பர் செல்போன் கிடையாது
ஆனால் டிவி கிடையாது, பேப்பர் கிடையாது, செல்போன் கிடையாது, பேஸ்புக் கிடையாது.. மற்ற வெளியுலக தொடர்புகளுக்கும் முற்றிலும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாம். கேட்டாலும், கெஞ்சினாலும் இது கிடைக்காதாம்.
டென்ஷனாக்கும் அமைச்சர்கள்
இந்த நிலையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் ஆகியோர் அவ்வப்போது டென்ஷனாக்கி விடுகிறார்களாம். செல்லூர் ராஜூவை நேற்று திடீரென காணவில்லையாம். "கடவே" தேடிப் பார்த்துள்ளனர். கடைசியில் ஒரு கக்கூஸ் பக்கமாக அவர் ஒரு அறையில் உட்கார்ந்துள்ளார். இங்கு என்ன செய்கிறீர்கள் என்று அவரை விசாரித்துத் துளைத்து விட்டதாம் அடியாட்கள் கும்பல்.
எப்பப் பார்த்தாலும் தூங்கும் சட்டம்!
அதேபோல சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் மிகப் பெரிய மதுப் பிரியர் என்கிறார்கள். அவர் எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டிருக்கிறாராம். தினசரி பிற்பகல் 12 மணிக்குத்தான் எழுந்திருக்கிறாராம். அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் உள்ளனராம் அடியாட்கள். நீண்ட நேரம் அவர் தூங்கி விடாமல் அவ்வப்போது எழுப்பி உட்கார வைக்கிறார்களாம்.
கடுமையான திட்டு
பல எம்.எல்.ஏக்கள் தங்களை விடுவிக்குமாறு கேட்டு கெஞ்சியுள்ளனராம். அவர்களுக்கு நல்ல திட்டு கிடைத்ததாம் இந்த அடியாட்களிடமிருந்து அதை மட்டும் கனவில் கூட நினைத்துப் பார்க்காதீர்கள். மேலிடம் உத்தரவிட்டால் மட்டுமே நீங்கள் போக முடியும். அதுவரை இங்கேயேதான் என்று மிரட்டுகிறார்களாம்.