ஈபிஎஸ் அணி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை
ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சென்னை: இரு அணிகள் இணைப்பில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையே இரு அணிகளும் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இணைப்பிற்கான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது.
Recommended Video
ஆனால், சசிகலாவை நீக்குவதற்கு ஈபிஎஸ் அணியில் உள்ள சில எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இதனால், இணைப்பு ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் செல்வதற்கான திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் உள்ள அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.