மாணவனுடன் மாயமான டுட்டோரியல் ஆசிரியை எங்கே?
திண்டுக்கல்: டுட்டோரியலில் படித்து வந்த தன்னை விட வயது குறைந்த மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஆசிரியை தற்போது கொடைக்கானல் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கோதைலட்சுமி என்ற 23 வயது ஆசிரியை 10ம் வகுப்பு மாணவனை காதலித்து ஓடிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே பாணியில் திண்டுக்கலில் ஒரு சம்பவம் அரங்கேறியது. திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த தேவராஜ் மகள் செபாஸ்டின் சாரதி (21). திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுட்டோரியலில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
அதே டுட்டோரியலில் படித்து வந்தவர் சதீஷ் குமார். இவருக்கு வயது 18. வகுப்பின்போது அடிக்கடி சதீஷ் குமார் டவுட் கேட்பார். கேள்விகள் கேட்டபடியே இருப்பார். இதனால் சதீஷ் குமாரை ஆசிரியைக்குப் பிடித்து விட்டது. இது பின்னர் காதலாக மாறி விட்டது.
பாட நேரம் தவிர மற்ற நேரங்களில் இருவரும் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரது வீட்டிலும் இவர்களின் காதல் குறித்துத் தெரிய வரவே கண்டித்துள்ளனர். இந்த நிலையில் மாணவனும், ஆசிரியையும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், இருவரும் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி என்னும் மலைக்கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸ் படை ஒன்று அங்கு விரைந்துள்ளது.