லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் உருப்படாது: மு.க. அழகிரி அதிரடி!
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க திமுக மேலிடம் தீவிரம் காட்டி வரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் உருப்படாமல் போகும் என்று அக்கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க. அழகிரி நேற்று அளித்த பேட்டி:
அரசியல் தலைவரே இல்லை..
விஜயகாந்த்தை அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகம் இல்லை. கடந்த முறை தேர்தல் நேரத்தில் விஜயகாந்த்தை, "என் நண்பர், கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு எடுப்பார்" என்று கூறினேன். அதற்கு அவர், "என்கூட அழகிரி கோலி விளையாடினாரா, பட்டம் விட்டாரா' என்று கேட்டார். நண்பர் என்று கூறியதற்கு யாராவது இப்படிச் சொல்வார்களா?
உருப்படாது
விஜயகாந்த், தற்போது எல்லாக் கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார். லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைத்தால் உருப்படாது.
தனித்து நின்றாலே போதும்
திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதைக் கொண்டே தேர்தலைச் சந்திக்கலாம். திமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டிப் பூசல்கள் இருக்கின்றன. ஒருங்கிணைந்து செயல்பட்டாலே திமுகவால் வெற்றிபெற முடியும்.
எனக்கு தகவல் இல்லை..
காங்கிரஸிலிருந்து திமுக விலகும் முன்பு மத்திய அமைச்சர்கள் 3 பேர் கருணாநிதியை சென்னையில் வந்து சந்தித்துப் பேசினர். அதனால் பிரச்னை சமூகமாக முடிந்துவிட்டது என்று கருதினேன். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே நான் இருக்கும்போது, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக சென்னையில் முடிவு எடுத்தனர். எனக்கு எந்தத் தகவலும் இல்லை. அதைப்போல நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்தனர்.
ஆனால் எனக்கு டி.ஆர்.பாலு எந்தக் தகவலும் கொடுக்கவில்லை. அதனால்தான் ஒரு நாள் தாமதமாக ராஜிநாமா கடிதம் கொடுத்தேன். காங்கிரஸிடம் இருந்து விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
அதிமுகவில் ஐக்கியம்?
அதிமுவில் சேர மாட்டேன். திமுகவில்தான் தொடர்வேன். காங்கிரஸில் நான் சேரப் போவதாக திமுக உறுப்பினர்களே நாடாளுமன்ற வளாகத்தில் என் முன்பே பேசினர். அதைப் போன்ற புரளிதான் இதுவும்.
மரியாதையே கிடையாது
ஒரு நாளும் நான் கட்சியில் பதவி கேட்டதே இல்லை. மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக பெரிய வெற்றி பெறும் அளவுக்கு உழைத்தேன். இதைப் பாராட்டி கருணாநிதியும், அன்பழகனும் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தனர்.
ஆனால், இப்போது என் வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பதவி இருக்கிறது, சிலருக்கு பதவி இல்லை என்பதால் தூண்டிவிட்டு, என்னைக் கொஞ்சம்கொஞ்சமாக கட்சியிலிருந்து புறக்கணிக்க வைத்தனர். அது யார் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
என்னால்தான் வெற்றி
கடந்த தேர்தலில் தென் மண்டலத்தில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றது. நாகர்கோவிலில் திமுக நின்றதே இல்லை. அங்கு திமுகவை நிற்கவைத்து வெற்றிபெறச் செய்தேன். மதுரையில் திமுக நின்றிருக்கிறது. ஆனால் ஜெயித்ததே இல்லை. நான்தான் ஜெயித்துள்ளேன். இப்படித் தென்மண்டலத்தில் திமுகவை வளர்த்துள்ளேன். ஆனால் இப்போது தென்மண்டலம் தொடர்பாக என்னிடம் கலந்து ஆலோசிப்பதே இல்லை. இது தொடர்பாக தலைமையிடமும் புகார் தெரிவித்துள்ளேன்.
தலைவர் பதவிக்கு குறியா?
திமுகவின் தலைவர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. அண்ணாவுக்குப் பிறகு நான் ஏற்கும் ஒரே தலைவர் கருணாநிதிதான். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கருணாநிதிக்கு முன்பு நான் இறக்க வேண்டும். என் உடலில் கருணாநிதியின் கண்ணீர் துளிகள் விழ வேண்டும் என்று அவர் கூறினார்.