எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதிக்கு உதவிய மு.க. அழகிரி.. வைகோ
சென்னை: எமர்ஜென்சி காலத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மு.க. அழகிரி, மு.க. செல்வம் உள்ளிட்டோர் உதவினர் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் திமுகவின் முரசொலி பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வைகோ பேசுகையில், ஒவ்வொரு கால கட்டத்திலும் கருணாநிதியின் எழுத்துகள் வீரியமாக இருந்தன என்பதை குறிப்பிட்டு வந்தார்.
மேலும், எமர்ஜென்சியின் போது அண்ணாவை பற்றி எழுதியதை அனுமதிக்க தணிக்கை அதிகாரிகள் திமிராக மறுத்துவிட்டனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த கருணாநிதி சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயகத்தைக் காக்கும் துண்டு பிரசுரங்களை தயார் செய்தார்.
அவரது வீட்டாரும் ஏராளமான துண்டு பிரசுரங்களை தயாரிக்க உதவினர். மு.க. அழகிரி. மு.க. தமிழரசு உதவியோடு அந்த துண்டு பிரசுரங்களை எடுத்துக் கொண்டு அண்ணா சாலை தேனாம்பேட்டையில் இருந்து விநியோகித்துக் கொண்டே சென்றார். ஏராளமான மக்கள் கூட்டம்.
அண்ணாசிலை அருகே இடியென முழங்கினார் கருணாநிதி. அப்போதுதான் தமிழகம் எரிமலையாக வெடிக்குமோ என அஞ்சி கருணாநிதியை கைது செய்ய அஞ்சியது இந்திரா காந்தி அரசு என்றார் வைகோ.