2011ல் முக்கிய இடத்தில் இருந்த மு.க.அழகிரி... ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவில் மு.க.அழகிரி முக்கிய இடம் வகித்தார். ஆனால் தற்போது அவர் திமுகவின் நிழலில் கூட ஒதுங்க முடியாத அளவுக்கு ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சு நடத்திய குழுவில் அழகிரிதான் முக்கிய இடம் வகித்தார் என்பது நினைவிருக்கலாம். காங்கிரஸ் கட்சி கடும் குடைச்சலைக் கொடுத்து வந்த சமயம் அது.
இந்த நிலையில் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அடங்கிய குழுதான் காங்கிரஸ் மேலிடத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தது. காங்கிரஸுக்கு இறுதியாக 63 தொகுதிகளைத் தரலாம் என்ற முடிவையும் அழகிரி தலைமையிலான குழுதான் சோனியா காந்தியை நேரில் சந்தித்துத் தெரிவித்து பிரச்சினைக்கும் தீர்வு கண்டது.
அதேபோல தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதிலும் கூட திமுக தலைவர் கருணாநிதி மு.க.ஸ்டாலினுடன் மட்டுமல்லாமல், அழகிரியுடனும் முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். பிரசாரத்திலும் கூட அழகிரிக்கு முக்கியத்துவம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று அழகிரி திமுகவிலேயே இல்லை.. கடந்த தேர்தலில் முக்கியத்துவம் வகித்த நிலையில் இன்று வேலை இல்லாமல் அழகிரி முடங்கிக் கிடப்பது அவரது ஆதரவாளர்களை வேதனைப்படுத்தியுள்ளது.