பணத்திற்காக வாக்கினை விற்க வேண்டாம்: கருணாநிதி
சென்னை: பணத்திற்காக வாக்கினை விற்றால், வாழ்க்கையை விற்றதாக பொருள் என்று சென்னை பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
டெசோ அமைப்பின் மூலமாக, நம்முடைய தீர்மானங்களை எல்லாம் உலக அரங்கத்திற்கு எடுத்துச்சென்று, அதை வலியுறுத்தி, இன்று உலக அரங்கில் இலங்கை பிரச்சினையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் அளவில் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, சென்னை அண்ணா நகர் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:
இந்த கூட்டத்தை பார்க்கும்போது நான் பேசி நீங்கள் வெற்றிக்கான பணியை செய்வீர்கள் என்று நான் கருதவில்லை. ஏற்கனவே நீங்கள் உறுதி செய்து வந்துள்ளீர்கள் என்றே நினைக்கிறேன்.
இந்த தேர்தலில் நான் தயாநிதி மாறனை ஆதரிக்க காரணம், அவருக்கு கொடுக்கப்படும் பணியை ஒழுங்காக, உண்மையாக நிறைவேற்றுவார் என்ற உறுதியை அவர் சார்பாக அவருடைய தாத்தாவாகிய நான் எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
கட்சித்தாவிய சிலர்
சிலர், பதவி கிடைக்காது என்ற எண்ணத்தில் வேறு சில கட்சிகளுக்கு தாவுவது உண்டு. கடந்த 2, 3 நாட்களில் அதைப்போல பல நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன். ஒரு இயக்கத்திலே அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து, அந்த இயக்கம் மீது அக்கறை இல்லாமல் அடுத்த இயக்கத்திற்கு தாவுபவர்கள் உண்டு.
தயாநிதிமாறன் உறுதி
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சகித்துக்கொண்டு, நான் இந்த ஒரே இயக்கத்தில்தான் இருப்பேன், விலகமாட்டேன் என்று உறுதியோடு எப்படி தனது தந்தை முரசொலிமாறன் இறுதிவரை தி.மு.க.வில் இருந்தாரோ, என்னுடைய பேரன் தயாநிதி மாறன் இறுதி வரை தி.மு.க. மீது பற்றுள்ளவராக, ஏழைகள் சுடராக, பாட்டாளிகள் கூட்டாளியாக நிச்சயமாக விளங்குவார் என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன்.
நாட்டுக்கு வெற்றி
தயாநிதி மாறன் வெற்றி நாட்டுக்கு பயன்படும் வெற்றி. அவர் செய்யும் சாதனை தமிழர்களுக்கு உரிய சாதனையாகும். அவரை தேர்ந்தெடுங்கள், உங்கள் அன்பான வாக்குகளை வழங்குங்கள். உதயசூரிய சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். அதற்காக இங்கே வந்துள்ளேன்.
பிரம்மாண்ட வெற்றி
நாட்டில் உள்ள சங்கடங்களை நீங்கள் படும் வேதனைகளை நான் பகிர்ந்துகொள்ள வேண்டாமா?. அதற் கான கூட்டமாகத்தான் இதை கருதுகிறேன். இந்த இயக்கத்திற்கு ஜனநாயக முன்னேற்ற கூட்டணி என்று பெயர் வைத்துள்ளோம். இந்த கூட்டணி எதிர்காலத்தில் பிரமாண்டமான வெற்றியை கொடுக்கும்.
சகஜம் என்ற ஜெயலலிதா
ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தபோது, ஜெயலலிதா சொன்னது, இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் செயல்படவில்லை. யுத்தம் நடக்கும்போது சாதாரண மக்களும் கொல்லப்படுவது சகஜம்தான் என்றார்.
இலங்கைத் தமிழர்கள்
மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்றார். இலங்கையில் இன்று யுத்தம் முடிந்தும், அங்கே மீண்டும் சுதந்திர காற்று வீசாதா என்று இலங்கை தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு வாழ்வு அளிப்பதற்காக தி.மு.க. இன்றளவும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.
டெசோ
டெசோ அமைப்பின் மூலமாக, நம்முடைய தீர்மானங்களை எல்லாம் உலக அரங்கத்திற்கு எடுத்துச்சென்று, அதை வலியுறுத்தி, இன்று உலக அரங்கில் இலங்கை பிரச்சினையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் அளவில் செய்துள்ளது. இலங்கை போரில் உயிர் நீத்த உத்தமர்கள், பிரபாகரன் போன்றவர்கள் பட்ட பாட்டுக்கு நாம் சிந்திய கண்ணீரை யாரும் மறுக்க முடியாது.
தமிழர்கள் நசுக்கப்படுகின்றனர்
இலங்கையில் இன்னும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்ற நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசும் அங்குள்ள தமிழர்களை கைவிட்டுவிட்டது. நமது வெறுப்பை காட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக்கொண்டோம்.
சின்னக் கூட்டணி
தி.மு.க. தனக்குள்ள தோழமை கட்சிகளோடு, தமிழர்களுக்காக பாடுபடும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, சின்னக்கூட்டணி என்றாலும் நம்முடைய எண்ணங்கள் பெரியவை என்ற அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் நமது எண்ணங்களை வலுப்படுத்த, குறிக்கோளை எட்ட இன்று இல்லாவிட்டால், நாளை, நாளையில்லா நாளை மறுநாள் வெற்றியடைவோம். இலங்கை தமிழர்களை வாழவைக்கும் அந்த நிலையை, இடையூறை முறியடிக்கும் நிலையை தி.மு.க. செய்து கொண்டிருக்கிறது. என்றார் கருணாநிதி.