கொடநாடு செல்கிறார் இங்கு வந்தாரா, எப்பொழுதாவது வந்தாரா?: ஆர்.கே. நகர் மக்களிடம் கேட்ட ஸ்டாலின்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுத பொருளாளர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதிப் பக்கமே வரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சென்னை ராயபுரம், ஆர்.கே. நகர், மாதவரம், பெரம்பூர், திருவொற்றியூர், சேப்பாக்கம், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார்.

மனோ
மனோவுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின் கூறுகையில், கிரானைட் ஊழலை திமுக மறைத்துவிட்டது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கிரானைட் ஊழல் குறித்து முதலில் விசாரணைக்கு உத்தரவிட்டதே திமுக தான். திமுக ஆட்சியில் கிரானைட் ஊழலை விசாரித்த அதிகாரிகளை மாற்றியது அதிமுக என்றார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா யாருடன் கூட்டணி வைத்துள்ளார் தெரியுமா? அவர் தலைமைச் செயலாளர், மாநில உளவுத் துறை, டி.ஜி.பி. ஆகியோருடன் தான் கூட்டணி வைத்துள்ளார். மே 16ம் தேதி அவர்கள் பதில் சொல்லும் காலம் வரும். இந்நிலையில் அவர் யாருடனும் கூட்டணி இல்லை என்கிறார் என்றார் ஸ்டாலின்.

சிம்லா முத்துச்சோழன்
ஆர்.கே. நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இந்தியாவிலேயே தொகுதி பக்கமே வராத சட்டசபை உறுப்பினர் ஜெயலலிதா தான். ஓய்வு எடுக்க நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் செல்வார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

110 விதி
110 விதியை முக்கிய பிரச்சனைகளை பற்றி பேச பயன்படுத்த வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் 110 விதியின் கீழ் ஏகப்பட்ட அறிவிப்புகள். அதில் எதையாவது நிறைவேற்றினாரா? ஆதாரத்துடன் தான் பேசுகிறேன். வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்று ஸ்டாலின் கூறினார்.

வெள்ளம்
சென்னையில் ஏற்பட்டது இயற்கையான வெள்ளம் அல்ல மாறாக ஜெயலலிதா ஏற்படுத்திய செயற்கை வெள்ளம். செம்பரம்பாக்கம் ஏரியை படிப்படியாக திறந்துவிடாததால் ஏற்பட்ட வெள்ளம். ஆனால் ஜெயலலிதாவோ மழை வெள்ளம் எல்லாம் இயற்கை என்றார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

நமக்கு நாமே
மக்கள் பிரதிநிதிகளை மக்கள் பார்க்கக் கூடாது. மாறாக மக்கள் பிரதிநிதிகள் தான் மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்பதை நமக்கு நாமே பயணத்தின் மூலம் உண்ர்ந்து கொண்டேன். நான் சென்னையில் இருந்தால் என் தொகுதிக்கு செல்லாமல் இருக்கவே மாட்டேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications